முத்துப்பேட்டையில் கலை, அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்


முத்துப்பேட்டையில் கலை, அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 Jun 2021 6:23 PM GMT (Updated: 11 Jun 2021 6:23 PM GMT)

முத்துப்பேட்டையில் கலை, அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவர் கனியமுதா தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கர், கமலராஜன், துணைத்தலைவர் கஸ்தூரி, மாவட்ட கவுன்சிலர் அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் சாமிநாதன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் உறுப்பினர்கள் இடையே நடந்த விவாதம் வருமாறு:-

பழனிவேலு (தி.மு.க.):- கற்பகநாதர்குளம் பகுதியில் உள்ள பழுதடைந்த சமுதாய கூடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும். முத்துப்பேட்டை ஒன்றிய, ஊராட்சி பகுதிகளை சேர்ந்த ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் முத்துப்பேட்டையில் கலை, அறிவியல் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மணல் கலந்த குடிநீர்

ரோஜாபானு (சுயேச்சை):-

உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சி நாச்சிக்குளம் பகுதியில் கஜா புயலில் சேதமடைந்த குடிநீர் தொட்டியை அகற்றிவிட்டு, அதிக கொள்ளளவு கொண்ட புதிய குடிநீர் தொட்டி கட்ட வேண்டும். கீழக்காடு பகுதியில் வினியோகிக்கப்படும் குடிநீரில் மணல் கலந்து வருகிறது. அதனை தடுத்து நல்ல குடிநீராக வழங்க வேண்டும்.

அன்பழகன் (பா.ஜனதா):-

தில்லைவிளாகம் ஊராட்சி பகுதியில் சேதமான சாலைகளை சீரமைக்க வேண்டும்.

குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு

அனிதா (சுயேச்்சை):-

குன்னலூர் சத்திரத்தெரு சாலை, மேலசேத்தி , கீழசேத்தி சாலை, எக்கல் - கடம்பவிளாகம் சாலை, கீழப்பெருமழை முதல் மரைக்கா கோரையாறு வரை உள்ள சாலை, கீழப்பெருமழை வடக்கு தெரு முதல் தர்க்காசு வரை உள்ள சாலை ஆகிய சாலைகளை சீரமைக்க வேண்டும்.

யசோதா (தி.மு.க.):-

மாங்குடி ஊராட்சியில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும்.

பாக்கியம் (அ.தி.மு.க.):-

தொண்டியக்காடு பகுதியில் 15 நாட்களுக்கு ஒருமுறை தான் தண்ணீர் வருகிறது. அதுவும் ஒரு குடம் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. தினமும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கனியமுதா (தலைவர்):- அனைத்து ஒன்றியக்குழு உறுப்பினர் பகுதிக்கும் ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

பாராட்டு

பஸ்களில் பெண்கள் இலவச பயணம், ரூ.4 ஆயிரம் கொரோனா நிவாரணம், ரேஷன் கடைகளில் 14 வகையான மளிகை பொருட்கள் உள்ளிட்ட திட்டங்களுக்கு பாராட்டு தெரிவித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர் கல்யாணம் (தி.மு.க.), வட்டார கல்வி அலுவலர் முருகபாஸ்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story