சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 8 டி.எம்.சி. தண்ணீர் சேமிப்பு


சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 8 டி.எம்.சி. தண்ணீர் சேமிப்பு
x
தினத்தந்தி 26 July 2021 3:49 AM GMT (Updated: 26 July 2021 3:49 AM GMT)

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 8 டி.எம்.சி. தண்ணீர் சேமிக்கப்பட்டு உள்ளதாக பொதுப்பணித்துறை மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை,

பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் மற்றும் கண்ணன்கோட்டை- தேர்வாய்கண்டிகை ஆகிய ஏரிகள் சென்னைக்கு தேவையான குடிநீரை வழங்கி வருகிறது. இந்த ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த வாரத்தின் தொடக்கத்தில் போதுமான அளவு மழை பெய்தது. இதனால் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதிநீருடன், மழைநீரும் வந்தது.

ஆனால் கடந்த 3 நாட்களாக மழை இல்லாததால் ஏரிகளுக்கு கிருஷ்ணா நதிநீர் திட்டத்தின் கீழ் திறக்கப்பட்ட தண்ணீர் மட்டும் 676 கன அடி வந்து கொண்டு இருக்கிறது.

நேற்றைய நிலவரப்படி பூண்டி ஏரியில் 1,481 மில்லியன் கன அடி, சோழவரம் ஏரியில் 628, புழல் ஏரியில் 2 ஆயிரத்து 684, கண்ணன் கோட்டை-தேர்வாய்கண்டிகை ஏரியில் 438, செம்பரம்பாக்கம் ஏரியில் 2 ஆயிரத்து 568 மில்லியன் கன அடி என மொத்தம் 7 ஆயிரத்து 799 மில்லியன் கன அடி தண்ணீர் சேமிக்கப்பட்டு உள்ளது.

8 டி.எம்.சி. சேமிப்பு

வீராணம் ஏரியில் 110.15 மில்லியன் கன அடியும் சேர்த்து தற்போது 7 ஆயிரத்து 909 மில்லியன் கனஅடி, அதாவது சராசரியாக 8 டி.எம்.சி. தண்ணீர் சேமிக்கப்பட்டு உள்ளது.

இதில் குடிநீருக்காக பூண்டியில் இருந்து 31 கன அடி, சோழவரம் ஏரியில் இருந்து 10, புழல் ஏரியில் இருந்து 162, கண்ணன்கோட்டை- தேர்வாய்கண்டிகையில் இருந்து 5, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 151 கன அடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது.

கூடுதல் தண்ணீர்

தற்போதைய இருப்பான 8 டி.எம்.சி.யுடன் வரவிருக்கும் ஓரிரு மாதங்களில் கிருஷ்ணா நதிநீர் திட்டம் மற்றும் பருவ மழையால் கூடுதல் தண்ணீர் ஏரிகளுக்கு வர வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக கடந்த ஆண்டைபோல் 11 டி.எம்.சி. வரை தண்ணீரை சேமிக்க வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதேகாலகட்டத்தில் அனைத்து ஏரிகளிலும் 6 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட தகவல்களை பொதுப்பணித்துறை மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story