செங்கல்பட்டில் அரசு சார்பில் 69 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியில் நலத்திட்ட உதவிகள்


செங்கல்பட்டில் அரசு சார்பில் 69 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியில் நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 12 Dec 2021 2:21 PM GMT (Updated: 12 Dec 2021 2:21 PM GMT)

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறைகள் சார்பாக ரூ.1 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

இதில் மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தலைமை தாங்கினார், காஞ்சீபுரம் எம்.பி. ஜி.செல்வம், செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் சோழிங்கநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ., எஸ்.அரவிந்த்ரமேஷ், திருப்போரூர் தொகுதி எம்.எல்.ஏ., எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் கலந்து கொண்டு தா.மோ.அன்பரசன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

பின்னர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:-

செங்கல்பட்டு உள்ளிட்ட புதியதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு ரூ.36.32 கோடி மதிப்பீட்டில் தொழிலாளர் நல வாரிய மாவட்ட அலுவலகங்கள் உருவாக்கப்படவுள்ளது.

இன்று (நேற்று) 69 பயனாளிகளுக்கு ரூ.61.17 லட்சம் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளும், அமைப்புச்சாரா தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் 1,111 பயனாளிகளுக்கு ரூ.39.62 லட்சம் மதிப்பீட்டிலான என மொத்தம் 1,180 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 79 ஆயிரத்து 354 மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன என அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி தலைவர் து.செம்பருத்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெ.செந்தில்குமாரி, தொழிலாளர் உதவி ஆணையர் ஆ.செண்பகராமன், ஒன்றிய குழுத்தலைவர்கள் உதயா கருணாகரன், இதயவர்மன் மற்றும் டாக்டர்கள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story