செங்கல்பட்டு அருகே பாலாற்றில் அடித்து செல்லப்பட்ட 3 பேர் பிணமாக மீட்பு
செங்கல்பட்டு அருகே பாலாற்றில் அடித்து செல்லப்பட்ட 3 பேர் பிணமாக மீட்கப்பட்டனர்.
அடித்து செல்லப்பட்டனர்
கடந்த மாதம் பெய்த கனமழையின் காரணமாக செங்கல்பட்டு அருகே உள்ள பாலாற்றில் அதிக அளவில் வெள்ளம் சென்று வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கிறிஸ்துமஸ் விடுமுறை தினத்தையொட்டி செங்கல்பட்டு மாவட்டம் திரிசூலம் பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு அடுத்த இருங்குன்றம்பள்ளியில் உள்ள பாலாற்றில் குளிக்க சென்றனர்.
அனைவரும் குளித்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக திரிசூலம் பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் லியோன்சிங் ராஜா (வயது 38), பிளஸ்-2 படித்து வரும் அவரது மகள் பெர்சி (16), அவரது அண்ணன் சேகரின் மகன் லெனின்ஸ்டன் (20) வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.
உடல்கள் மீட்பு
இதுகுறித்து செங்கல்பட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ரப்பர் படகு மூலம் அவர்களை தேடிவந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் இவர்கள் மூழ்கிய இடத்திலேயே சேற்றில் சிக்கிய நிலையில் லியான்சிங் ராஜா, அவரது மகள் பெர்சி இருவரையும் தீயணைப்பு துறையினர் மீட்டனர். இதையடுத்து தீவிர தேடுதலின்படி லெனின்ஸ்டன் என்பவரையும் பிணமாக மீட்டனர்.
அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து படாளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story