தலைக்கு ரூ.30 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த பெண் உள்பட 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை


தலைக்கு ரூ.30 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த பெண் உள்பட 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 20 Jun 2022 2:10 PM GMT (Updated: 20 Jun 2022 2:15 PM GMT)

தலைக்கு 30 லட்ச ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த பெண் உள்பட 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

போபால்,

சத்தீஸ்கர், மராட்டியம், ஜார்க்கண்ட், மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்கள் நக்சலைட்டுகள், மாவோயிஸ்ட்டுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்த நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு தனிப்படை போலீசாருடன் இணைந்து மத்திய ரிசர்வ் போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேவேளை, நக்சலைட்டுகள் செய்த குற்றங்களின் அடிப்படையில் தலைக்கு அரசு சார்பில் லட்சக்கணக்கில் சன்மானம் அறிவிக்கப்படுவதுண்டு.

இந்நிலையில், மத்தியபிரதேசத்தின் பாலஹட் மாவட்டம் பஹிலா பகுதியில் உள்ள வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலையடுத்து, அப்பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, அங்கு பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் போலீசார் நடத்திய தாக்குதலில் பெண் உள்பட 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட நக்சலைட்டுகளில் நாகேஷ் என்பவரின் தலைக்கு ரூ. 15 லட்சமும், மனோஜ் மற்றும் ராமே என்ற பெண்ணின் தலைக்கு தலா ரூ.8 லட்சமும் என மொத்தம் ரூ 30 லட்சம் சன்மானம் அறிவிக்கப்படிருந்தது என போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story