மேகாலயா, நாகாலாந்தில் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது நாளை வாக்குப்பதிவு


மேகாலயா, நாகாலாந்தில் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது நாளை வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 25 Feb 2018 11:00 PM GMT (Updated: 25 Feb 2018 8:24 PM GMT)

மேகாலயா, நாகாலாந்தில் நேற்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. இரு மாநிலங்களிலும் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

ஷில்லாங்,

மேகாலயா மாநிலத்தில் உள்ள 60 சட்டமன்ற தொகுதிகளுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அங்கு மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 18 லட்சத்து 44 ஆயிரத்து 785 பேர். இதில் முதன் முறையாக வாக்களிப்பவர்கள் 9 ஆயிரத்து 905 பேர் ஆவர்.

அந்த மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. முகுல் சங்மா முதல்–மந்திரியாக உள்ளார். வருகிற சட்டமன்ற தேர்தலிலும் ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் கட்சி களம் இறங்கி இருக்கிறது. இதற்காக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி அங்கு தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். கடைசி நாளான நேற்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் முக்கிய நகரங்களில் பேரணியாக சென்று வாக்கு சேகரித்தார்.

மேகாலயாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை அகற்ற பா.ஜனதாவும் முனைப்பு காட்டி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் மக்களை கவரும் வகையில் ‘மாநில வளர்ச்சி’ என்ற யுக்தியை கையில் எடுத்து பிரசாரம் செய்தனர்.

இதுதவிர தேசிய மக்கள் கட்சி, ஐக்கிய ஜனநாயக கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சி உள்ளிட்டவைகளும் கணிசமான இடங்களை கைப்பற்ற தீவிர பிரசாரம் மேற்கொண்டன.

நாகாலாந்து மாநிலத்தில் உள்ள 59 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 13–வது சட்டசபையை அமைக்க நாகாலாந்து மக்கள் கட்சி, காங்கிரஸ், பா.ஜனதா, ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி, லோக் ஜனசக்தி, தேசிய மக்கள் கட்சி ஆகியவை தீவிரமாக களம் இறங்கி உள்ளன.

இரு மாநிலங்களிலும் நேற்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. அங்கு மார்ச் 3–ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story