பல்வேறு கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றம் 4–வது நாளாக ஒத்திவைப்பு


பல்வேறு கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றம் 4–வது நாளாக ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 9 March 2018 12:00 AM GMT (Updated: 8 March 2018 8:32 PM GMT)

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2–வது கட்ட அமர்வு 5–ந் தேதி தொடங்கியது. #Parliament

புதுடெல்லி,

பல்வேறு கட்சிகளின் அமளியால் இரு அவைகளும் கடந்த 3 நாட்களாக நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. 4–வது நாளாக நேற்று மக்களவை கூடியது. அப்போது அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகளை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார். இதையடுத்து காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் வங்கி மோசடி தொடர்பாக அமளியில் ஈடுபட்டனர். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி தெலுங்கு தேசமும், இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று தெலுங்கானா ராஷ்டிர சமிதியினரும் வலியுறுத்தினர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், பெரியார் சிலை உடைப்புக்கு கண்டனம் தெரிவித்தும் அ.தி.மு.க. எம்.பி.க்கள் கோ‌ஷமிட்டனர். தொடர்ந்து அமளி நீடித்ததால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இதே பிரச்சினை மாநிலங்களவையிலும் எதிரொலித்தது. காவிரி பிரச்சினை தொடர்பாக அ.தி.மு.க.–தி.மு.க. எம்.பி.க்கள் கோ‌ஷமிட்டனர். மற்ற கட்சிகள் வழக்கம்போல தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவையை நாள் முழுவதும் துணைத்தலைவர் பி.ஜே.குரியன் ஒத்திவைத்தார். தொடர்ந்து 4 நாட்களாக நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story