சினிமா பார்க்கும்போது இருட்டில் சிறுமிக்கு பாலியல் தொல்லை, தாயாரையும் போலீஸ் கைது செய்தது


சினிமா பார்க்கும்போது இருட்டில் சிறுமிக்கு பாலியல் தொல்லை, தாயாரையும் போலீஸ் கைது செய்தது
x
தினத்தந்தி 13 May 2018 1:24 PM GMT (Updated: 13 May 2018 1:24 PM GMT)

கேரளாவில் சினிமா பார்க்கும் போது இருட்டில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட வழக்கில் தாயாரையும் போலீஸ் கைது செய்தது.



மலப்புரம், 

இந்தியா முழுவதும் பெண்கள் மற்றும் சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து காணப்படுகிறது. 12 வயதுக்கு குறைவான சிறுமிகளை பாலியல் கொடுமை செய்தால் மரண தண்டனை விதிக்கப்படும் எனவும் அவசரச்சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இருப்பினும் சிறார்கள் கொடூரர்களால் இலக்காக்கப்படும் கொடூரமான சம்பவம் தொடர்பான செய்திகள் வெளிவந்த வண்ணமே உள்ளது. கேரளாவில் சினிமா பார்க்கும் போது இருட்டில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மலப்புரத்தில் உள்ள தியேட்டரில் இருட்டை பயன்படுத்தி தொழிலதிபர் மொய்தீன் குட்டி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். திரையரங்கில் இச்சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் 18-ம் தேதி நடந்து உள்ளது. திரையரங்கில் திருட்டு தொடர்பான வழக்கில் சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டது. திரையரங்க ஊழியர்கள் அதனை ஆய்வு செய்த போது சிறுமிக்கு 60 வயதாகும் தொழிலதிபர் மொய்தீன் குட்டி பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான தகவல் வெளி உலகத்திற்கு தெரியவந்தது. இதுதொடர்பாக திரையரங்கம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் போலீஸ் தரப்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்விவகாரம் மீடியாவிற்கு சென்றதும் பிரச்சனையாகி உள்ளது. பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

 இதனையடுத்து போலீஸ் வழக்குப்பதிவு செய்து தொழில் அதிபர் மொய்தீன் குட்டியை கைது செய்து உள்ளது. சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட வழக்கில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யாத எஸ்.ஐ. சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் போஸ்கோ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இப்போது இவ்வழக்கில் சிறுமியின் தாயாரையும் போலீஸ் கைது செய்து உள்ளது. சிறுமியின் தாயாரும் தொழில் அதிபர் அருகே இருந்து உள்ளார். ஆனால் முதியவர் சிறுமியிடம் தவறாக நடந்தபோது அதனை தட்டிக்கேட்கவில்லை. சிறுமியின் தாயாரின் மீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. 

Next Story