அசாம் மாநிலத்தில் மத்திய மந்திரி மீது கற்பழிப்பு வழக்கு பதிவு


அசாம் மாநிலத்தில் மத்திய மந்திரி மீது கற்பழிப்பு வழக்கு பதிவு
x
தினத்தந்தி 10 Aug 2018 10:45 PM GMT (Updated: 10 Aug 2018 10:00 PM GMT)

அசாம் மாநிலத்தில் ரெயில்வே இணை மந்திரி மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் கைது செய்யப்படுவாரா என்பது குறித்து போலீசார் விளக்கம் அளித்தனர்.

கவுகாத்தி,

மத்திய ரெயில்வே இணை மந்திரி ராஜென் கோகாய்ன். இவர், அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்.

இவர், 24 வயதான ஒரு பெண்ணை கற்பழித்ததாகவும், மிரட்டியதாகவும் அசாம் மாநிலம் நாகோன் மாவட்டம் நாகோன் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. புகாரின் பேரில், கடந்த 2–ந்தேதி இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து நாகோன் போலீஸ் நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

மத்திய மந்திரி ராஜென் கோகாய்னுக்கும், அந்த 24 வயது பெண்ணுக்கும் நீண்ட காலமாக பழக்கம் உண்டு. அந்த பெண், திருமணம் ஆனவர். அடிக்கடி அவரது வீட்டுக்கு மத்திய மந்திரி சென்று வருவார்.

கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ஒருநாள், அந்த பெண்ணின் வீட்டுக்கு மத்திய மந்திரி ராஜென் கோகாய்ன் சென்றபோது, பெண்ணின் கணவரோ, குடும்பத்தினரோ யாரும் இல்லை. அப்போது, அந்த பெண்ணை ராஜென் கோகாய்ன் கற்பழித்து விட்டதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.

இதன்பேரில், இந்திய தண்டனை சட்டம் 417 (ஏமாற்றுதல்), 376 (கற்பழிப்பு), 506 (அச்சுறுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளது. நாங்கள் ஏற்கனவே விசாரணையை தொடங்கி விட்டோம். பெண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்து விட்டோம். ஆனால், அப்பெண் மருத்துவ பரிசோதனைக்கு வர மறுக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த வழக்கில், மத்திய மந்திரி ராஜென் கோகாய்ன் உடனடியாக கைது செய்யப்படுவாரா? என்று அந்த போலீஸ் அதிகாரியிடம் கேட்டபோது, ‘‘இப்போது நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். தேவைப்பட்டால், விசாரணை முடிவடைந்த பிறகு மட்டுமே கைது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று அவர் கூறினார்.

இந்த விவகாரத்தில் சட்டப்படி நடப்போம் என்று நாகோன் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சபீதா தாஸ் கூறினார்.


Next Story