6 புதிய அனல் மின்திட்டங்களுக்கு நிலக்கரி ஒதுக்கீடு வழங்க வேண்டும் - டெல்லியில் மத்திய மந்திரியிடம், மின்சார துறை அமைச்சர் கோரிக்கை


6 புதிய அனல் மின்திட்டங்களுக்கு நிலக்கரி ஒதுக்கீடு வழங்க வேண்டும் - டெல்லியில் மத்திய மந்திரியிடம், மின்சார துறை அமைச்சர் கோரிக்கை
x
தினத்தந்தி 8 Nov 2018 8:38 PM GMT (Updated: 8 Nov 2018 8:40 PM GMT)

தமிழகத்தில் உற்பத்தி தொடங்க உள்ள 6 புதிய அனல் மின்திட்டங்களுக்கு நிலக்கரி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என டெல்லியில் மத்திய மந்திரியிடம், மின்சார துறை அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுடெல்லி,

தமிழகத்தில் புதிதாக உற்பத்தி தொடங்க உள்ள 6 அனல் மின்திட்டங்களுக்கு தேவையான நிலக்கரி ஒதுக்கீட்டை உடனடியாக வழங்க வேண்டும் என்று டெல்லியில் மத்திய நிலக்கரி துறை மந்திரியை சந்தித்து, தமிழக மின்சார துறை அமைச்சர் பி. தங்கமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லியில் மத்திய நிலக்கரி மற்றும் ரெயில்வே துறை மந்திரி பியூஷ் கோயலை, தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி சந்தித்து பேசினார். அப்போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானகழகத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் விக்ரம் கபூர், எரிசக்தித்துறை தலைவர் முகமது நசிமுதீன் ஆகியோர் உடனிருந்தனர். இந்த சந்திப்பின்போது தமிழகத்தில் அனல் மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி ஒதுக்கீடு தொடர்பாக பியூஷ் கோயலிடம் பி. தங்கமணி எடுத்துக் கூறினார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் அமைச்சர் பி.தங்கமணி கூறியதாவது:-

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மூலம் 2020-21-ம் ஆண்டுகளில் மின் உற்பத்தி தொடங்க இருக்கும் வடசென்னை (திட்டம் 3 (1 x 800 மெகாவாட்), உப்பூர் (2 x 800 மெகாவாட்), உடன்குடி (2 x 660 மெகாவாட்), எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலம் (2 x 660 மெகாவாட்), எண்ணூர் விரிவாக்கம் (1 x 660 மெகாவாட்), எண்ணூர் (மாற்று) (1 x 660 மெகாவாட்) ஆகிய அனல் மின் திட்டங்களுக்கு தேவையான நிலக்கரி ஒதுக்கீட்டினை உடனடியாக வழங்குமாறு மத்திய நிலக்கரித்துறை மந்திரியிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அனல் மின் நிலையங்களுக்கு சராசரியாக நாள் ஒன்றுக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. (அதாவது 20 ரெயில்களில் நிலக்கரி எடுத்து வர வேண்டி உள்ளது). மழைக்காலம் தொடங்க உள்ளதால் அனல்மின் நிலையங்களில் நிலக்கரியின் கையிருப்பு அதிகமாக இருக்க வேண்டும். குறைந்தது 15 நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு இருக்க வேண்டும். இதற்காக தினமும் 20 ரெயில்களில் நிலக்கரி அனுப்புமாறு மத்திய நிலக்கரித்துறை மந்திரியிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தித்துறை மந்திரி ஆர்.கே.சிங்கை சந்தித்து பேசினேன். அப்போது தமிழகத்துக்கு மத்திய மின் தொகுப்பில் இருந்து வரவேண்டிய 6 ஆயிரத்து 312 மெகாவாட் மின்சாரத்தில், தற்போது 3 ஆயிரத்து 376 மெகாவாட் மட்டும் தான் வந்து கொண்டிருக்கிறது; எனவே மத்திய மின் தொகுப்பிலிருந்து தமிழகத்துக்கு வரவேண்டிய மின்சாரத்தை முழுமையாக வழங்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காற்றாலை மின்சாரம் அதிகமாக கிடைக்கும் மாதங்களான மே முதல் செப்டம்பர் வரையிலான கால கட்டத்தில் கூடங்குளம் அணு மின் நிலையத்தின் வருடாந்திர பராமரிப்பு பணியினை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story