காஷ்மீரில் கடும் குளிர் - தால் ஏரி உறைந்தது


காஷ்மீரில் கடும் குளிர் - தால் ஏரி உறைந்தது
x
தினத்தந்தி 7 Dec 2018 6:54 PM GMT (Updated: 7 Dec 2018 6:54 PM GMT)

காஷ்மீரில் கடும் குளிர் காரணமாக தால் ஏரி உறைந்தது.

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் ஸ்ரீநகரில் தால் ஏரி அமைந்துள்ளது. உலகளவில் பிரபலமான இந்த ஏரி, சுற்றுலாப்பயணிகளின் சொர்க்கம் ஆகும். அதனால்தான் இந்த ஏரி, காஷ்மீர் மகுடத்தில் வைரக்கல் என போற்றப்படுகிறது. இத்தகைய சிறப்புக்குரிய தால் ஏரியின் கரையோரப் பகுதி உறைந்து விட்டது.

அங்கு உயிரை உறைய வைக்கும் அளவுக்கு கடும் குளிர் நிலவி வருகிறது. காலை நேரத்திலும், மாலை நேரத்திலும் குழந்தைகளும், மூத்த குடிமக்களும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

நேற்று முன்தினம் ஸ்ரீநகரில் வெப்ப நிலை மைனஸ் 4 டிகிரியாக குறைந்து விட்டது. எனவே தால் ஏரி மட்டுமல்லாமல், பிற நீர் நிலைகளும் உறைந்து போய் உள்ளன. குழாய்த்தண்ணீரும் உறைந்து போய் உள்ளது.

தால் ஏரிக்கரையில் நின்று மக்கள், உறைந்த போன ஏரியில் கற்களையும், காகிதங்களையும் வீசி மகிழ்ச்சி அடைந்தனர்.

அதே நேரத்தில் குடிநீர்க்குழாயில் தண்ணீர் வராமல் குடி நீருக்கு மக்கள் அவதிப்படுகிற நிலையும் அங்கு நிலவுவதாக தகவல்கள் கூறுகின்றன.



Next Story