பெற்ற தாயை துடைப்பம் கொண்டு அடித்த சிறுவன்; வீடியோ வைரலானது


பெற்ற தாயை துடைப்பம் கொண்டு அடித்த சிறுவன்; வீடியோ வைரலானது
x
தினத்தந்தி 9 Dec 2018 5:26 AM GMT (Updated: 9 Dec 2018 7:57 AM GMT)

கர்நாடகாவில் பெற்ற தாயை துடைப்பம் கொண்டு அடித்த சிறுவன் போலீசார் முன்னிலையில் மன்னிப்பு கேட்டுள்ளான்.

பெங்களூரு,

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் வசித்து வரும் 50 வயது நிறைந்த தாய், தனது மகன் சரியாக படிப்பதில்லை என்றும் அவனது வருங்காலம் பற்றிய தனது கவலையையும் அருகே வசிப்போரிடம் பேசி வந்துள்ளார்.

இதனை அறிந்த அவரது 17 வயது மகன் வருத்தத்தில் இருந்து உள்ளான்.  சமீபத்தில் இதுபோன்று அவர் பேசியுள்ளார்.  இதனை கண்ட அவரது மகன் ஆத்திரம் அடைந்து உள்ளான்.  அதன்பின்னர் துடைப்பம் ஒன்றை எடுத்து அவரை அடித்து உள்ளான்.  தன்னை பற்றி பக்கத்து வீட்டுக்காரர்களிடம் பேச கூடாது என்று கூறியுள்ளான்.

நீ இதுபோன்று தொடர்ந்து பேசினால், நான் இதுபோன்று தொடர்ந்து அடிப்பேன் என மிரட்டியபடி அடித்து உள்ளான்.  இதனால் அவனது தாய் வலியால் அலறியுள்ளார்.  இதனை தடுக்க முற்பட்ட சகோதரியையும் சிறுவன் அமைதியாயிரு என தடுத்து உள்ளான்.  இவை அனைத்தும் சகோதரியால் வீடியோ பதிவு செய்யப்பட்டு உள்ளது.

போலீசில் புகார் அளிப்பது பற்றியும் தனக்கு கவலையில்லை என அவன் கூறியுள்ளான்.  இந்த நிலையில், இதுபற்றிய வீடியோ வைரலாக பரவியது.  இதனை அடுத்து ஜே.பி. நகர் போலீசார் அவர்களாக முன்வந்து சிறுவன் மீது
வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதன்பின்னர் அவன் மைனர் சிறுவன் என்பதனால் எச்சரிக்கை செய்துள்ளனர்.  போலீசார் முன் தனது தாயிடம் சிறுவன் மன்னிப்பு கேட்டுள்ளான்.  வருங்காலத்தில் திரும்பவும் இதுபோன்று செய்வதில்லை என போலீசாரிடம் அவன் உறுதி தெரிவித்துள்ளான்.

Next Story