திமுக உடனான எங்களின் கூட்டணி காலத்தை வென்றது, பலமானது - ராகுல் காந்தி


திமுக உடனான எங்களின் கூட்டணி காலத்தை வென்றது, பலமானது - ராகுல் காந்தி
x
தினத்தந்தி 9 Dec 2018 2:01 PM GMT (Updated: 9 Dec 2018 2:01 PM GMT)

திமுக உடனான எங்களின் கூட்டணி காலத்தை வென்றது, பலமானது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.


புதுடெல்லி,


மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் முழு உருவ சிலை அறிவாலய வளாகத்தில் திறக்கப்படுகிறது. அண்ணா, கருணாநிதி ஆகியோரது சிலைகள் ஒரே இடத்தில் அமைக்கப்படுகிறது. சிலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. வருகிற 16-ந்தேதி (ஞாயிறு) நடைபெறும் விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார். இந்நிலையில் இன்று டெல்லி சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சோனியா காந்தியின் இல்லத்துக்கு நேரில் சென்று விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார். சோனியா காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்தையும் தெரிவித்தார்.

 இந்த சந்திப்பின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., கனிமொழி, எம்.பி., ஆ.ராசா ஆகியோர் உடனி இருந்தனர். கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து சோனியா காந்தியிடமும், ராகுல் காந்தியிடமும் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இச்சந்திப்பு குறித்து டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மு.க. ஸ்டாலின் மற்றும் திமுகவின் மூத்த உறுப்பினர்கள் டெல்லி வந்து சோனியாஜியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் நாங்கள் பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதித்தோம். திமுக உடனான எங்களின் கூட்டணி காலத்தை வென்றது, பலமானது'' என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு நன்றி தெரிவித்து டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ள மு.க. ஸ்டாலின், ஒரே நோக்கம் கொண்ட கொள்கைகள் அர்த்தமுள்ள விவாதங்கள் மற்றும் நல்ல பலன்களையும் ஏற்படுத்தும். காங்கிரஸ் - திமுக கூட்டணி எப்போதும் நாட்டின் ஒற்றுமையை பலப்படுத்தும் நோக்கில் உழைக்கும் என்று தெரிவித்துள்ளார். 

Next Story