ரபேல் விவகாரம்: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும் -ராஜ்நாத் சிங்
ரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.
புதுடெல்லி,
ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற மனுக்களை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு, ரபேல் விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்கும், நீதிமன்றம் தலையிடுவதற்கும் எந்தவிதமான முறைகேடும் இருப்பதாகத் தெரியவில்லை என்றது. இவ்விவகாரத்தில் மக்களை காங்கிரஸ் தவறாக வழிநடத்தியது என பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு இதற்கான தளம் கிடையாது, பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணையைதான் கேட்டோம் என காங்கிரஸ் கூறியுள்ளது.
இதுதொடர்பாக உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசுகையில், ரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் இப்போதும் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை கோரி காங்கிரஸ் போராடி வருகிறது. ராஜ்நாத் சிங் பேசுகையில், “அரசியல் வளர்ச்சிக்காக ரபேல் போர் விமான விவகாரம் தொடர்பாக மக்களை தவறாக வழிநடத்தியதற்கு ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் மன்னிப்பு கோரவேண்டும்,” என கூறியுள்ளார்.
ராகுல் காந்தியின் அரசியல் பிரசாரம் உலக அளவில் இந்தியாவின் தோற்றத்தை சிதைத்துவிட்டது எனவும் குற்றம் சாட்டியுள்ளார் ராஜ்நாத் சிங். காங்கிரஸ் மீது ஏதேனும் ஊழல் குற்றச்சாட்டு இருந்தால், அதற்குப் பதிலாக பா.ஜனதா மீதும் போட்டியாக ஏதாவது ஒரு குற்றச்சாட்டை காங்கிரஸ் கூறுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் ஸ்திரமாக உள்ளது.
Related Tags :
Next Story