ஜிசாட்- 7ஏ செயற்கைகோள் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது


ஜிசாட்- 7ஏ செயற்கைகோள் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது
x
தினத்தந்தி 19 Dec 2018 11:51 AM GMT (Updated: 19 Dec 2018 11:51 AM GMT)

ஜிசாட்- 7ஏ செயற்கைகோள் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

ஸ்ரீஹரிகோட்டா,

இந்திய விமானப்படையின் தகவல் தொடர்புக்காக ஜிசாட்- 7ஏ என்ற செயற்கைகோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்து உள்ளது.

இந்த செயற்கைகோளுடன் ‘ஜி.எஸ்.எல்.வி’.- எப்11 ராக்கெட் இன்று மாலை 4.10 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இதற்கான ‘கவுண்ட்டவுன்’ நேற்று தொடங்கியது.

இதனை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து இன்று விண்ணில் செலுத்தப்பட்டது.

3 நிலைகளை கொண்ட ஜி.எஸ்.எல்.வி- எப்11 ராக்கெட்டின் முதல்நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பும் பணி நிறைவடைந்து உள்ளது. 3-வது நிலையில் முழுவதும் உள்நாட்டில் இந்திய விஞ்ஞானிகளால் வடிவமைக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது.

49.1 மீட்டர் உயரம் கொண்ட ஜி.எஸ்.எல்.வி.- எப்11 ராக்கெட்டின் எடை 415.6 டன் ஆகும். இதில் வைத்து அனுப்பப்படும் 2,250 கிலோ எடை கொண்ட ஜிசாட்- 7ஏ செயற்கைகோள் பூமியில் இருந்து அதிகபட்சமாக 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திலும், குறைந்தபட்சம் 170 கிலோ மீட்டர் தூரத்திலும் கொண்ட சுற்றுப்பாதையில் பூமியை சுற்றி வர இருக்கிறது. விமானப்படைக்கு தேவையான தகவல்களை இந்த செயற்கைகோள் மூலம் பெற முடியும். மேற்கண்ட தகவலை இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள்.

இது பாதுகாப்பு துறைக்கான செயற்கைகோள் என்பதனால் இதன் பணிகள் பற்றி வெளிப்படையாக கூற வேண்டியதில்லை.  விண்ணில் ஏவப்படுவதற்கு முன்பு ராக்கெட் முழுவதும் பரிசோதிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்படுகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஜிசாட்- 7ஏ செயற்கைகோளை சுமந்து சென்ற ஜி.எஸ்.எல்.வி.யின் பயணம் வெற்றியடைந்து உள்ளது.  அது விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story