நிலையான மற்றும் திறமையான அரசு அமைய வேண்டும்; வாபஸ் பெற்ற எம்.எல்.ஏ.க்கள் பேட்டி


நிலையான மற்றும் திறமையான அரசு அமைய வேண்டும்; வாபஸ் பெற்ற எம்.எல்.ஏ.க்கள் பேட்டி
x
தினத்தந்தி 15 Jan 2019 11:25 AM GMT (Updated: 15 Jan 2019 11:25 AM GMT)

நிலையான மற்றும் திறமையான அரசு அமைய வேண்டும் என வாபஸ் பெற்ற எம்.எல்.ஏ.க்கள் பேட்டியளித்து உள்ளனர்.

பெங்களூர்

கர்நாடக சட்டசபைக்கு கடந்த ஆண்டு மே மாதம் 12-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது.  இதில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை.  மொத்தம் உள்ள 224 இடங்களில் பாரதீய ஜனதா 104 இடங்களை கைப்பற்றியது. காங்கிரசுக்கு 82 இடங்களும், ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு 38 இடங்களும் கிடைத்தன.

அதிக இடங்களை கைப்பற்றிய பாரதீய ஜனதாவை சேர்ந்த எடியூரப்பா முதல்-மந்திரியாக முதலில் பதவி ஏற்றார். ஆனால் சட்டசபையில் மெஜாரிட்டியை அவரால் நிரூபிக்க முடியவில்லை.  இதனால் அவர் பதவி விலகினார். இதனை அடுத்து ஜனதா தளம் (எஸ்) கட்சி ஆட்சி அமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்தது.

இதைத்தொடர்ந்து அங்கு காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைந்தது. முதல்-மந்திரியாக ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த குமாரசாமி இருந்து வருகிறார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் ‘ஆபரேஷன் தாமரை’ என்ற குதிரை பேர நடவடிக்கையை எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா தொடங்கி இருப்பதாக காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியை கவிழ்த்துவிட்டு, பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் ஜார்கிகோளி, ஆனந்த்சிங், நாகேந்திரா ஆகியோர் திடீரென்று மாயமாகிவிட்டனர். அவர்கள் மும்பையில் தங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர்களுடன் காங்கிரஸ் தலைவர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இவர்கள் தவிர பி.சி.பட்டீல், கணேஷ் ஜூக்கேரி, பீமாநாயக், ஹொலகேரி, உமேஷ் ஜாதவ், பிரதாப் பட்டீல் உள்ளிட்ட 9 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாரதீய ஜனதாவுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த 12 எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க.வில் இணையப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில்   குமாரசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 2 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் இன்று வாபஸ் பெர்று கொண்டனர்.  எச். நாகேஷ் மற்றும் ஆர். சங்கர் ஆகிய இரு சுயேட்சை எம்.எல்,ஏ.க்கள் கவர்னர்ருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், கர்நாடக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை உடனடியாக வாபஸ் பெறுவதாக கூறி உள்ளனர்.

இதுபற்றி சங்கர் கூறும்பொழுது, இன்று மகர சங்கராந்தி.  இந்த நாளில் அரசில் ஒரு மாற்றம் வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.  அரசு திறமையுடன் இருக்க வேண்டும்.  அதனால் எனது ஆதரவை (கர்நாடக அரசுக்கு அளித்து வந்த) இன்று வாபஸ் பெறுகிறேன் என கூறியுள்ளார்.

இதேபோன்று நாகேஷ் கூறும்பொழுது, கூட்டணி அரசுக்கான எனது ஆதரவு என்பது நல்ல மற்றும் நிலையான அரசு அமைய வேண்டும் என்பதற்காக.  ஆனால் இது முற்றிலும் தோல்வி அடைந்து விட்டது.  கூட்டணியினரிடையே புரிதல் இல்லை.  அதனால் நிலையான ஆட்சி அமைய பாரதீய ஜனதாவை ஆதரிக்க முடிவு செய்துள்ளேன்.  அந்த அரசு கூட்டணி அரசை விட சிறப்புடன் செயல்படும் என கூறியுள்ளார்.

Next Story