நாடாளுமன்ற தேர்தல் தேதி மார்ச் முதல் வாரம் அறிவிக்கப்படும் - ஆயத்த பணிகளில் தேர்தல் கமிஷன் மும்முரம்


நாடாளுமன்ற தேர்தல் தேதி மார்ச் முதல் வாரம் அறிவிக்கப்படும் - ஆயத்த பணிகளில் தேர்தல் கமிஷன் மும்முரம்
x
தினத்தந்தி 19 Jan 2019 12:15 AM GMT (Updated: 18 Jan 2019 11:07 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் கமிஷன் மும்முரமாக ஈடுபட்டு உள்ளது. தேர்தல் தேதி மார்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதுடெல்லி, 

தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதியுடன் முடிவடைகிறது.

எனவே அதற்கு முன்னதாக நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.

இந்த தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையில் ஓர் அணியும், காங்கிரஸ் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிட இருக்கின்றன. இந்த இரு அணிகளிலும் இடம்பெறாத கட்சிகளை ஒருங்கிணைத்து 3-வது அணி ஒன்றை உருவாக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

கூட்டணி அமைப்பது தொடர்பாக கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்ட பிறகுதான் எந்த கட்சி எந்த அணியில் இருக்கும் என்பது தெரியவரும்.

நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, அருணாசலபிரதேசம், ஒடிசா, சிக்கிம், காஷ்மீர் மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

எனவே நாடாளுமன்ற தேர்தலுடன் மேற்கண்ட 5 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்துவதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் கமிஷன் மும்முரமாக ஈடுபட்டு உள்ளது. எத்தனை கட்டங்களாக வாக்குப்பதிவை நடத்துவது? என்பது பற்றியும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள், தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் ஒரு கடிதம் எழுதி இருக்கிறது. அதில், ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் அதிகாரிகளை இடமாற்றம் செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டு உள்ளது.

சிக்கிம் சட்டசபையின் பதவிக்காலம் மே 27-ந் தேதியுடனும், அருணாசலபிரதேச சட்டசபையின் பதவிக்காலம் ஜூன் 1-ந் தேதியுடனும், ஒடிசா சட்டசபையின் பதவிக் காலம் ஜூன் 11-ந் தேதியுடனும், ஆந்திர சட்டசபையின் பதவிக்காலம் ஜூன் 18-ந் தேதியுடனும் முடிவடைகிறது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காஷ்மீர் மாநில சட்டசபை கலைக்கப்பட்டது. இதனால் 6 மாத காலத்துக்குள் காஷ்மீர் சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

அந்த வகையில் நாடாளுமன்ற தேர்தலுடன் மேற்கண்ட 5 மாநிலங்களுக்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது.

எனவே நாடாளுமன்ற தேர்தல் தேதியும், 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் தேதியும் வருகிற மார்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக டெல்லியில் நேற்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

2014-ம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் தேதியை மார்ச் 5-ந் தேதி தேர்தல் கமிஷன் அறிவித்தது. அப்போது ஏப்ரல் 7-ந் தேதி தொடங்கி மே 12-ந் தேதி வரை 9 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தது.

இதனால் இந்த ஆண்டும் நாடாளுமன்ற தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போதுதான் தேர்தல் எத்தனை கட்டங்களாக நடைபெறும் என்பது தெரியவரும்.


Next Story