நிதி மோசடி வழக்கு: ராபர்ட் வதேராவிடம் 2-வது நாளாக விசாரணை - அமலாக்கத்துறை அதிகாரிகள் சரமாரி கேள்வி


நிதி மோசடி வழக்கு: ராபர்ட் வதேராவிடம் 2-வது நாளாக விசாரணை - அமலாக்கத்துறை அதிகாரிகள் சரமாரி கேள்வி
x
தினத்தந்தி 7 Feb 2019 10:15 PM GMT (Updated: 7 Feb 2019 9:16 PM GMT)

நிதி மோசடி வழக்கில் ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2-வது நாளாக சரமாரியாக கேள்வி எழுப்பி விசாரணை நடத்தினார்கள்.

புதுடெல்லி, 

சோனியா காந்தியின் மருமகனும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனருமான ராபர்ட் வதேரா ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார். லண்டனில் அவர் சுமார் ரூ.17 கோடி மதிப்புள்ள சொத்து வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள், நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இது தொடர்பான இ-மெயில் தகவல்கள் மற்றும் ஆவணங்களை கைப்பற்றி இருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் ராபர்ட் வதேராவிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டது.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் அரசியல் ரீதியாக தன்னை பழிவாங்க போடப்பட்டவை என ராபர்ட் வதேரா தெரிவித்து வந்தார். மேலும் இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க டெல்லி சிறப்பு கோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு அவர் மனுத்தாக்கல் செய்தார்.

இதை விசாரித்த கோர்ட்டு, ராபர்ட் வதேராவை கைது செய்ய 16-ந் தேதி வரை இடைக்கால தடை விதித்தது. அதே சமயம் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்படி நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு ராபர்ட் வதேரா வந்தார். அவரிடம் சுமார் 5½ மணி நேரம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணை வியாழக்கிழமையும் (நேற்று) நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதை தொடர்ந்து வதேரா அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

முதல்நாள் விசாரணை குறித்து ராபர்ட் வதேராவின் வக்கீல்கள் கூறுகையில், வதேரா மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. இருந்தாலும் அவர் அதிகாரிகளின் விசாரணைக்கு 100 சதவீதம் ஒத்துழைப்பு கொடுத்தார். எப்போது அழைத்தாலும் அவர் விசாரணைக்கு வர தயாராக உள்ளார் என்றனர்.

இந்நிலையில் 2-வது நாளாக நேற்று பகல் 11.25 மணிக்கு விசாரணைக்கு அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேரா மீண்டும் ஆஜரானார். அவரிடம் 3 அதிகாரிகள் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். சட்டவிரோத பணபரிமாற்றம் குறித்தும், லண்டனில் உள்ள 9 சொத்துகளில் வேறு, வேறு பெயர்களில் எப்படி வாங்கப்பட்டது என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் சரமாரியாக எழுப்பினர்.

இதையடுத்து மதிய உணவு இடைவேளைக்கு பிறகு மீண்டும் அவரிடம் அதிகாரிகள் துருவி, துருவி விசாரணை நடத்தினர். அவை அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்தனர்.

இதற்கிடையே ராஜஸ்தான் மாநிலத்தில் நிலம் வாங்கி விற்றதில் மோசடி நடந்ததாக அமலாக்கத்துறை மற்றொரு வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் அமலாக்கத்துறைக்கு ஒத்துழைக்கும்படி ராஜஸ்தான் ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது. அதன்படி ஜெய்ப்பூரில் 12-ந் தேதி அவர் அந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராவார் என தெரிகிறது.


Next Story