சந்திரபாபு நாயுடு வீடு கட்ட நாங்கள் நிலம் தருகிறோம்; விவசாயிகள் அறிவிப்பு


சந்திரபாபு நாயுடு வீடு கட்ட நாங்கள் நிலம் தருகிறோம்; விவசாயிகள் அறிவிப்பு
x
தினத்தந்தி 29 Jun 2019 10:50 AM GMT (Updated: 29 Jun 2019 11:58 AM GMT)

ஆந்திர பிரதேச முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு தலைநகரில் வீடு கட்ட நாங்கள் நிலம் தருகிறோம் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் அமராவதி நகரில், கிருஷ்ணா நதிக்கரையில் ஆந்திர பிரதேச முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு வசித்து வரும் வீடு சட்டவிரோதமாக கட்டப்பட்டதாக கூறி அதனை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சந்திரபாபு நாயுடு ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பிரஜா வேதிகா கட்டிடத்தை ஆந்திர மாநில அரசு, அண்மையில் இடித்து தள்ளிய நிலையில், சந்திரபாபு நாயுடுவின் வீட்டை காலி செய்யுமாறு ஆந்திர பிரதேச மண்டல பிராந்திய வளர்ச்சி ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அரசு வெளியிட்டிருக்கும் தகவலின் அடிப்படையில், கிருஷ்ணா நதிக்கரையில் இருந்து 100 மீட்டருக்குள் கட்டிடங்கள் கட்டுவது சட்டவிரோதம். எனவே, அவ்வாறு சுற்றுச்சூழல் விதிகளுக்கு மாறாக கட்டப்பட்டிருக்கும் 28 வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர பிரதேச முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவின் வீடு கிருஷ்ணா ஆற்றை ஒட்டி கட்டப்பட்டு உள்ளது.  இது விதிமுறைகளை மீறிய செயல் என கூறி அதனை இடிக்க ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு உத்தரவிட்டு நோட்டீசு ஒன்றையும் அனுப்பியுள்ளது. 

இந்த நிலையில், சந்திரபாபுவை அவரது வீட்டில் வைத்து முன்னாள் எம்.எல்.ஏ.வான டி. சரவண குமார் தலைமையில் பெண்கள் உள்பட எண்ணற்ற விவசாயிகள் சந்தித்து பேசினர்.  இதில், தலைநகர் பகுதியில் உள்ள கிராமங்களில் வீடு கட்டுவதற்கு தேவையான நிலம் அளிக்க தயாராக இருக்கிறோம் என விவசாயிகள் கூறினர்.

ஆந்திர பிரதேசத்தில் தலைநகர் அமராவதி அமைய 33 ஆயிரம் ஏக்கர்கள் நிலம் அளித்துள்ளோம்.  ஒரு வீடு கட்ட 3 ஆயிரத்து 300 சதுர யார்டுகள் (ஒரு யார்டு என்பது 3 அடி) அளவுக்கு நிலம் அளிக்க எங்களால் முடியாதா? என அவர்கள் நாயுடுவிடம் கூறியுள்ளனர்.

சில விவசாயிகள், தங்களது கிராமத்தில் நாயுடுவுக்கு வீடு கட்டுவதற்கான செலவை ஏற்கவும் தயார் என அறிவித்து உள்ளனர்.  தலைநகர் பகுதியில் எந்த கிராமத்தில் வசிக்க விரும்புகிறீர்கள் என்பதனை நீங்கள் முடிவு செய்யுங்கள்.  எங்களது நிதியை கொண்டு உங்களுக்காக வீடு ஒன்றை நாங்கள் கட்டுகிறோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

Next Story