வேலூரில் ரூ.2 கோடியே 38 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது - சத்யபிரத சாஹூ


வேலூரில் ரூ.2 கோடியே 38 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது - சத்யபிரத சாஹூ
x
தினத்தந்தி 22 July 2019 2:16 PM GMT (Updated: 22 July 2019 2:16 PM GMT)

வேலூரில் முறையான ஆவணங்கள் இன்றி எடுத்துச்சென்றதாக ரூ.2 கோடியே 38 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறியுள்ளார்.


சென்னை, 

 
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ செய்தியாளர்களிடம் பேசுகையில்,  வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு 10 கம்பெனி துணை ராணுவ வீரர்களை அனுப்ப இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் கூடுதலாக 10 கம்பெனி துணை ராணுவ வீரர்களை அனுப்பவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். 

கூடுதல் துணை ராணுவ வீரர்களை அனுப்பவில்லை என்றால், மாநில போலீசாரை கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவதற்கு நாங்கள் திட்டமிட்டுள்ளோம். வேலூரில் 75 பறக்கும் படை, 39 கண்காணிப்பு குழு, 12 வீடியோ கண்காணிப்பு குழுவினர் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன்மூலம் வாகனங்களில் ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமாக ரொக்க பணம் முறையான ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்பவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இதுபோன்று ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்றதாக ரூ.2 கோடியே 38 லட்சம் பணமும், ரூ.89.41 லட்சம் மதிப்புள்ள 2.980 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவு நடைபெறும். வேலூர் தொகுதியில் வாக்காளர்கள் பெயர் சேர்க்கை முடிந்துவிட்டது. இதையடுத்து இறுதி வாக்காளர் பட்டியல் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும்.  வாக்குப்பதிவு ஆகஸ்டு 5–ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் நடைபெறும். வேலூர் நாடாளுமன்ற தேர்தலையொட்டி கூடுதல் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக ராஜாராமன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் தற்போது காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடும் எனக் கூறியுள்ளார். 

Next Story