காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம்: இந்திய ஒருமைப்பாட்டில் மிகப்பெரிய மைல்கல் - அமித் ஷா பேச்சு


காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம்: இந்திய ஒருமைப்பாட்டில் மிகப்பெரிய மைல்கல் - அமித் ஷா பேச்சு
x
தினத்தந்தி 16 Aug 2019 11:15 PM GMT (Updated: 16 Aug 2019 9:49 PM GMT)

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது, நாட்டின் ஒருமைப்பாட்டில் மிகப்பெரிய மைல்கல் என்று அமித் ஷா கூறினார்.

சண்டிகார்,

அரியானா மாநிலத்தில் இன்னும் 2 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தின் ஜிந்த் நகரில் நேற்று நடைபெற்ற பா.ஜனதா பொதுக்கூட்டத்தில், அக்கட்சி தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா கலந்து கொண்டார்.

கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

நாங்கள் 2-வது தடவையாக பதவிக்கு வந்த 75 நாட்களில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 மற்றும் 35ஏ சட்டப்பிரிவுகளை நீக்கினோம். ஆனால் இந்த நாட்டை 72 ஆண்டுகளாக ஆண்ட காங்கிரஸ் கட்சி இதை செய்யவில்லை. அதற்கு ஓட்டு வங்கி ஆசைதான் காரணம்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது, நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு மிகப்பெரிய மைல்கல். காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று நாங்கள் கூறி வந்தோம். ஆனால், இன்னும் அது முழுமை பெறவில்லை என்று 370-வது பிரிவு சொல்லிக்கொண்டே இருந்தது.

அந்த பிரிவை நீக்கியதையடுத்து, காஷ்மீர், லே, லடாக் பிராந்தியங்களின் வளர்ச்சிக்கு என்னென்ன முட்டுக்கட்டைகள் இருந்தனவோ, அவை அனைத்தும் நீங்கி விட்டன என்று நாட்டுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். பயங்கரவாதத்தையும் ஒழிக்க உதவும்.

முப்படைகளுக்கும் ஒரே தலைவரை நியமிக்கும் யோசனை, 1999-ம் ஆண்டு கார்கில் போரைத் தொடர்ந்து முன்வைக்கப்பட்டது. அந்த யோசனை, இப்போதுதான் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த புதிய பதவியில் நியமிக்கப்படுபவர், ராணுவ விவகாரங்கள், வியூகங்கள் ஆகியவற்றில் பிரதமருக்கு ராணுவ ஆலோசகராக செயல்படுவார்.

மூன்று படைகளுக்கு இடையிலும், அரசுக்கும், முப்படைகளுக்கு இடையிலும் ஒருங்கிணைப்பை உருவாக்கும் நோக்கத்தில் இந்த பதவி உருவாக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை, நாட்டின் பாதுகாப்பை பலமடங்கு பலப்படுத்தும். இவ்வாறு அமித் ஷா பேசினார்.


Next Story