தேச துரோக வழக்கில் ஷீலா ரஷீதை கைது செய்ய இடைக்கால தடை- டெல்லி நீதிமன்றம் உத்தரவு


தேச துரோக வழக்கில் ஷீலா ரஷீதை கைது செய்ய இடைக்கால தடை- டெல்லி நீதிமன்றம் உத்தரவு
x
தினத்தந்தி 10 Sep 2019 7:14 AM GMT (Updated: 10 Sep 2019 7:17 AM GMT)

தேச துரோக வழக்கில் டெல்லி மாணவி ஷீலா ரஷீதை கைது செய்ய இடைக்கால தடை விதித்து டெல்லி பட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவி ஷீலா ரஷீத்,  ஜம்மு-காஷ்மீரில் நிலவி வரும் சூழல் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தவறான தகவல்களை பரப்பியதாக கடந்த மாதம் குற்றச்சாட்டு எழுந்தது. மாணவர்கள் தலைவராகவும், சமூக ஆர்வலராகவும் செயல்பட்டு வரும் இவரை, பலர் டுவிட்டர் பக்கத்தில் பின்தொடர்ந்து வருகின்றனர். 

இந்நிலையில் வழக்கறிஞர் அலக் அலோக் ஸ்ரீவஸ்த்தவா, ஷீலா ரஷீத்துக்கு எதிராக கிரிமினல் புகார் ஒன்றை தாக்கல் செய்தார். அதில் சமூக வலைதளங்களில் இந்திய அரசாங்கத்திற்கும், இந்திய ராணுவத்திற்கும் எதிராக இவர் கருத்து பதிவிட்டு வருவதாகவும், இவர் செய்து வருவது இந்திய தண்டனை சட்டப் பிரிவு 124-ஏன் கீழ் மிகப்பெரிய தேசத்துரோக குற்றம் என்றும் கூறப்பட்டிருந்தது. இதனால் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி  ஷீலா ரஷீத் மீது இந்திய தண்டனைச் சட்டம் 124-ஏ, 153, 153-ஏ, 504 மற்றும் 505 ஆகிய பிரிவுகளின் கீழ் டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த பட்டியாலா நீதிமன்ற கூடுதல் அமர்வு நீதிபதி பவன் குமார், ஷீலா ரஷீதை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். அதன்பிறகு இந்த வழக்கு தொடர்பான விசாரணை நவம்பர் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வழக்கு தொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக ஷீலா ரஷீத் தெரிவித்துள்ளார். மேலும் ஜம்மு-காஷ்மீரில் நிலவி வரும் சூழல் குறித்து ஷீலா ரஷீத் கூறிய கருத்தை ஆதாரமற்றது என்று கூறி இந்திய ராணுவம்  நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

Next Story