மராட்டியம், அரியானாவில் இன்று பிரசாரம் ஓய்கிறது- நாளை மறுநாள் வாக்குப்பதிவு


மராட்டியம், அரியானாவில் இன்று பிரசாரம் ஓய்கிறது- நாளை மறுநாள் வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 19 Oct 2019 1:57 AM GMT (Updated: 19 Oct 2019 2:08 AM GMT)

மராட்டியம் மற்றும் அரியானா சட்டசபை தேர்தலில் அனல் பறக்கும் பிரசாரம் இன்றுடன் ஓய்வதால் தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இங்கு சட்டசபை தேர்தலை ஆளும் பா.ஜனதா - சிவசேனா கட்சிகள் கூட்டணி வைத்து சந்திக்கின்றன. அதேபோல பிரதான எதிர்க்கட்சிகளான காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் கைகோர்த்து இழந்த ஆட்சியை கைப்பற்ற தேர்தல் களத்தில் மல்லுகட்டுகின்றன. 

ராஜ்தாக்கரே தலைமையிலான மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி தனித்து போட்டியிடுகிறது. இதுதவிர பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாடி, பகுஜன் சமாஜ், ஐதராபாத் எம்.பி. ஒவைசியின் எம்.ஐ.எம். கட்சிகளும் தேர்தலில் தங்களது பலத்தை காண்பிக்க களத்தில் உள்ளன. 

90 தொகுதிகளைக் கொண்ட அரியானாவில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.  இரு மாநில சட்ட மன்ற தேர்தலுக்கான பிரசாரம் இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதனால் இன்று தலைவர்களும், வேட்பாளர்களும் தங்களது இறுதிக் கட்ட பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.

இதைத் தொடர்ந்து நாளை மறுநாள்(திங்கட்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 24-ந் தேதி (வியாழக்கிழமை) வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே அனைத்து தொகுதிகளின் முடிவுகளும் அறிவிக்கப்படுகின்றன.


Next Story