காஷ்மீருக்கு செல்ல ஐரோப்பிய யூனியன் எம்.பிக்களை அனுமதித்தது ஏன்? மத்திய அரசுக்கு சிவசேனா கேள்வி


காஷ்மீருக்கு செல்ல ஐரோப்பிய யூனியன் எம்.பிக்களை அனுமதித்தது ஏன்? மத்திய அரசுக்கு சிவசேனா கேள்வி
x
தினத்தந்தி 30 Oct 2019 8:18 AM GMT (Updated: 30 Oct 2019 8:18 AM GMT)

காஷ்மீருக்கு செல்ல ஐரோப்பிய யூனியன் எம்.பிக்களை அனுமதித்தது ஏன்? என்று மத்திய அரசுக்கு சிவசேனா கேள்வி விடுத்துள்ளது.

மும்பை,

ஐரோப்பிய யூனியன் எம்.பிக்கள் குழு காஷ்மீர் சென்றதற்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ள சிவசேனா, காஷ்மீர் விவகாரம் சர்வதேச பிரச்சினையல்ல என்று தெரிவித்துள்ளது.   தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா, காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததை வரவேற்றது.  

இந்த நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த மராட்டிய சட்டமன்ற தேர்தலில் பாஜக- சிவசேனா கூட்டணிகள் இணைந்து 161 இடங்களில் வென்றன.  இந்தக் கூட்டணிக்கு ஆட்சி அமைக்க போதிய பலம் உள்ள போதிலும், அதிகாரப்பகிர்வு தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.   

இந்த சூழலில், மத்திய அரசை விமர்சித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் வெளியிட்டுள்ள  கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:- ''ஜம்மு காஷ்மீர் விவகாரம் என்பது முற்றிலும் உள்நாட்டு விவகாரம் என்று இந்திய அரசு உலக அளவில் கூறி வருகிறது. இது சர்வதேச விவகாரம் அல்ல என்றும் வலியுறுத்தி வருகிறது.

ஆனால், ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 23 எம்.பி.க்களுக்கு எவ்வாறு காஷ்மீர் சென்று கள நிலவரத்தை அறிய மத்திய அரசு அனுமதி அளித்தது?  ஐரோப்பிய யூனியன் எம்.பிக்கள் காஷ்மீர் சென்றது, இந்தியாவின் சுதந்திரம் மற்றும் இறையாண்மைக்கு எதிராக அத்துமீறி நுழைவதாகக் கருதப்படாதா? 

காஷ்மீர் பிரச்சினையை ஐநாவுக்கு கொண்டு சென்றதற்காக தொடர்ந்து நேருவை விமர்சிக்கும் போது, ஐரோப்பிய யூனியன் எம்.பிக்களுக்கு ஏன்? அனுமதி அளிக்கப்பட்டது. இந்தக் கேள்விகளுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் அளிக்க வேண்டும்” என்று கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

Next Story