ஓடும் காரில் கல்லூரி மாணவி கற்பழிப்பு; 3 பேர் மீது வழக்கு - உத்தரபிரதேசத்தில் கொடூர சம்பவம்


ஓடும் காரில் கல்லூரி மாணவி கற்பழிப்பு; 3 பேர் மீது வழக்கு - உத்தரபிரதேசத்தில் கொடூர சம்பவம்
x
தினத்தந்தி 24 Nov 2019 9:49 PM GMT (Updated: 24 Nov 2019 9:49 PM GMT)

உத்தரபிரதேசத்தில் கல்லூரி மாணவியை துப்பாக்கி முனையில் கடத்தி ஓடும் காரிலேயே கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முசாபர்நகர்,

உத்தரபிரதேசத்தின் முசாபர்நகரில் வசித்து வரும் 24 வயது கல்லூரி மாணவி ஒருவர் நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். இவர் போப்பா சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஒரு கார் வந்து அவருக்கு அருகே நின்றது.

பின்னர் அதில் இருந்து இறங்கிய சுபோத் (26) என்ற வாலிபரும், அவரது நண்பர்கள் இருவரும், துப்பாக்கி முனையில் மாணவியை வலுக்கட்டாயமாக காருக்குள் ஏற்றி கடத்தினர். பின்னர் காருக்குள், துப்பாக்கி முனையில் அவரை மது குடிக்க வைத்தனர்.

இதைத்தொடர்ந்து ஓடும் காரிலேயே கல்லூரி மாணவியை சுபோத் கற்பழித்தார். இதை அவரது நண்பர்கள் இருவரும் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர். மது குடித்து மயங்கியதால் மாணவியால் சத்தம் போட முடியவில்லை.

சில மணி நேரத்துக்கு பின், சுபோத் மற்றும் நண்பர்கள் இணைந்து மாணவியை அவரது கல்லூரிக்கு வெளியே இறக்கி விட்டுவிட்டு தப்பி ஓடினர். மேலும் அவரிடம், நடந்த சம்பவம் குறித்து வெளியில் கூறினால் கொலை செய்து விடுவோம் எனவும் அவர்கள் மிரட்டினர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுபோத் உள்ளிட்ட 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் மாணவிக்கு மருத்துவ பரிசோதனையும் நடைபெற்றது.

கற்பழிப்பில் ஈடுபட்ட வாலிபர் சுபோத் ஏற்கனவே அந்த மாணவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகவும், அவரது தொல்லை தாங்காமல்தான் கிராமத்தில் இருந்து முசாபர்நகரில் மாணவியின் குடும்பத்தினர் குடியேறியதும் தெரியவந்துள்ளது.

ஓடும் காரிலேயே கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்ட இந்த கொடூர சம்பவம் முசாபர்நகர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே முசாபர்நகர் மாவட்டத்தின் நரோட்டம்பூர் மஜ்ரா கிராமத்துக்கு அருகே நேற்று முன்தினம் வயலில் வேலை செய்து கொண்டிருந்த 22 வயது இளம்பெண் ஒருவரை 2 வாலிபர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தினர். பின்னர் அருகில் உள்ள கரும்புத்தோட்டத்துக்கு அவரை இழுத்துச்செல்ல முயன்றபோது அவர்களை இளம்பெண்ணின் உறவினர்கள் பிடிக்க முயன்றனர்.

ஆனால் அவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு வாலிபர்கள் தப்பி ஓடினர். இது குறித்த புகாரின் பேரில் அந்த 2 வாலிபர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.


Next Story