சிவசேனா தலைமையில் ஆட்சி அமைந்து ஒருவாரம் ஆகியும் மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கவில்லை: பா.ஜனதா கண்டனம்


சிவசேனா தலைமையில் ஆட்சி அமைந்து ஒருவாரம் ஆகியும் மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கவில்லை: பா.ஜனதா கண்டனம்
x
தினத்தந்தி 6 Dec 2019 3:41 AM GMT (Updated: 6 Dec 2019 3:41 AM GMT)

சிவசேனா தலைமையில் ஆட்சி அமைந்து ஒருவாரம் ஆகியும் மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கவில்லை என பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

மும்பை, 

மராட்டியத்தில் சிவசேனா கட்சி, காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து கடந்த மாதம் 28-ந் தேதி ஆட்சி அமைத்தது. இந்த கூட்டணி சார்பில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்- மந்திரியாகவும், 3 கட்சிகளை சேர்ந்த தலா 2 பேர் என 6 மந்திரிகளும் பதவி ஏற்றுக்கொண்டனர். ஆனால் பதவி ஏற்று ஒரு வாரம் கடந்த நிலையில் இதுவரை மந்திரிகளுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

இதற்கு பாரதீய ஜனதா கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து அக்கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி ஆஷிஸ் செலார் வெளியிட்ட அறிக்கையில் ‘சிவசேனா தலைமையிலான கூட்டணி பதவியேற்றபோது சுதந்திரமாக செயல்படுவோம் என வாக்குறுதி அளித்தது. ஆனால் பதவி ஏற்று ஒரு வாரம் ஆன பின்னரும் இதுவரை மந்திரிகளுக்கு இலாகா கூட ஒதுக்கப்படவில்லை. இது கண்டிக்கத்தக்கது. கூட்டணியில் உள்ள 3 கட்சி எம்.எல்.ஏ.க்கள் இடையே தற்போது பெரும் அமைதியின்மை நிலவி வருகிறது’ என்று கூறியுள்ளார்.

Next Story