எரிக்கப்பட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி சாவு - குற்றவாளிகளை சுட்டுத்தள்ளவேண்டும் என தந்தை ஆவேசம்


எரிக்கப்பட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி சாவு - குற்றவாளிகளை சுட்டுத்தள்ளவேண்டும் என தந்தை ஆவேசம்
x
தினத்தந்தி 7 Dec 2019 11:00 PM GMT (Updated: 7 Dec 2019 9:11 PM GMT)

உன்னாவ் கற்பழிப்பு சம்பவத்தில், தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குற்றவாளிகளை என்கவுண்ட்டர் நடத்தி சுட்டுக்கொல்ல வேண்டும் என்று அந்த பெண்ணின் தந்தை ஆவேசமாக கூறினார்.

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த 23 வயது பெண் ஒருவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தன்னை தனது கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் சிவம் திரிவேதி, சுபம் திரிவேதி என்னும் இருவர் கடத்திச்சென்று கற்பழித்து விட்டதாக சென்ற மார்ச் மாதம் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் அவர்கள் இருவர் மீதும் போலீசார் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்தனர். அவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டு, கடந்த 10 நாட்களுக்கு முன்னர் ஜாமீனில் வந்தார். மற்றொருவர் தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்த வழக்கின் விசாரணை ரேபரேலியில் உள்ள கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணைக்காக, பாதிக்கப்பட்ட இளம்பெண் கடந்த 5-ந் தேதி கோர்ட்டுக்கு புறப்பட்டு சென்றார். அப்போது அவரை சிவம் திரிவேதி, சுபம் திரிவேதி உள்ளிட்ட 5 பேர் வழிமறித்து, ஈவிரக்கம் இல்லாமல் தீ வைத்தனர். அந்தப் பெண் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் அலறி துடித்தார்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு உள்ளூர் மருத்துவமனைகளில் முதலுதவி அளித்தனர்.

அவர் கோட்டாட்சியர் தயாசங்கர் பதக்கிடம் வாக்குமூலம் அளித்தார். தன் மீது சிவம் திரிவேதி, சுபம் திரிவேதி, ஹரிசங்கர் திரிவேதி, ராம் கிஷோர் திரிவேதி, உமேஷ் திரிவேதி ஆகிய 5 பேர் தீ வைத்ததாக கூறினார். அவர்கள் 5 பேரும் உடனடியாக கைது செய்யப்பட்டு விட்டனர்.

தீ வைக்கப்பட்ட இளம்பெண், உயர் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சப்தர்ஜிங் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். 90 சதவீதம் தீக்காயம் அடைந்த நிலையில் அவரை காப்பாற்ற டாக்டர்கள் போராடினர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக சிகிச்சை அளித்து வந்த டாக்டர்கள் அறிவித்தனர். அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல், இதயம் செயலிழந்த நிலையில் அன்று இரவு 11.40 மணிக்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சப்தர்ஜிங் ஆஸ்பத்திரியின் தடயவியல் பிரிவில் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின்னர் உடல், குடும்பத்தினர்வசம் ஒப்படைக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் மூலம் சாலை வழியாக அவரது உடல் சொந்த ஊருக்கு (உன்னாவ்) எடுத்துச்செல்லப்பட்டது.

அடுத்த ஒரு மணி நேரத்தில் ஒரு பெண், சிறுமியான தனது மகளுடன் சப்தர்ஜிங் ஆஸ்பத்திரி முன்பு வந்தார். அவர் தன்னுடன் எடுத்து வந்திருந்த மண் எண்ணெயை மகள் மீது ஊற்றி, உன்னாவ் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்க வேண்டும் என்று கோஷம் போட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் விரைந்து வந்து, அந்த சிறுமியை காப்பாற்றினர். அவர் மீது மண் எண்ணெய் ஊற்றிய தாயை அழைத்துச்சென்றனர்.

தீ வைக்கப்பட்ட பெண்ணின் இறப்புக்கு உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அனுதாபம் தெரிவித்தார்.

இதையொட்டி லக்னோவில் அவர் வெளியிட்ட அறிக்கையில், தீ வைக்கப்பட்ட பெண்ணின் உயிரிழப்பு தனக்கு மிகுந்த வேதனையை தந்துள்ளதாகவும், குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு விட்ட நிலையில், அவர்கள் மீதான விசாரணையை விரைவு கோர்ட்டில் நடத்தி, தண்டிக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

அந்தப் பெண் இறந்த செய்தி அறிந்து, அவரது சொந்த ஊர் (உன்னாவ் மாவட்டம், பீகார் கிராமம்) சோகத்தில் மூழ்கியது.

அந்தப் பெண்ணின் தந்தை, “ எனக்கு பணமோ, வேறு உதவிகளோ தேவை இல்லை. ஐதராபாத்தில் என்கவுண்ட்டர் நடத்தி கொன்றதுபோல, இந்த வழக்கிலும் குற்றவாளிகளை என்கவுண்ட்டர் நடத்தி கொல்ல வேண்டும் அல்லது தூக்கில் போட வேண்டும்” என்று ஆவேசமாக கூறினார்.

அந்தப் பெண்ணின் சகோதரரும், தன் சகோதரியின் சாவுக்கு காரணமானவர்களை என்கவுண்ட்டர் நடத்தி கொல்ல வேண்டும் என்று கூறினார்.

Next Story