ஆதார் மற்றும் பான் இணைப்புக்கான தேதி நீட்டிப்பு; மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு


ஆதார் மற்றும் பான் இணைப்புக்கான தேதி நீட்டிப்பு; மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு
x
தினத்தந்தி 31 Dec 2019 3:08 AM GMT (Updated: 31 Dec 2019 3:08 AM GMT)

ஆதார் மற்றும் பான் இணைப்புக்கான தேதியை நீட்டித்து மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

புதுடெல்லி,

நாட்டில் தனி நபருக்கான நிரந்தர கணக்கு எண் (பான்) அட்டைக்கு ஆதார் கட்டாயம் என்று சுப்ரீம் கோர்ட்டு வெளியிட்ட உத்தரவில் தெரிவித்திருந்தது.  இதன்படி, பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டது.

இந்த இணைப்புக்கு கடைசி காலக்கெடுவாக முதலில் கடந்த மார்ச் 31ந்தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.  அதன் பின்பு, பல்வேறு காரணங்களால் பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு 6 முறை நீட்டிக்கப்பட்டது.

பின்னர் 2019 செப்டம்பர் 30ந்தேதிக்குள் பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டது.  இதனிடையே, ஆதார் மற்றும் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு இந்த வருடம் செப்டம்பர் 30ந்தேதியில் இருந்து டிசம்பர் 31ந்தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில், ஆதார் மற்றும் பான் இணைப்புக்கான காலக்கெடுவை நீட்டித்து மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.  வருகிற 2020ம் ஆண்டு மார்ச் 31ந்தேதி வரை இந்த நீட்டிப்பு நடைமுறையில் இருக்கும்.  வருமானவரி தாக்கல் செய்ய வேண்டும் என்றால் பான் கார்டு மற்றும் ஆதார் எண் இணைப்பு கட்டாயமாக உள்ளது.

Next Story