2018-19 ஆம் ஆண்டில் மற்ற கட்சிகளை விட மூன்று மடங்கு அதிக நன்கொடைகளை பெற்ற பா.ஜனதா
மற்ற தேசிய கட்சிகளை விட பா.ஜனதா மூன்று மடங்கு அதிக நன்கொடைகளைப் பெற்று உள்ளது என ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் வெளியிட்டு உள்ள தகவலில் தெரியவந்து உள்ளது
புதுடெல்லி
2018-19 ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் எவ்வளவு நன்கொடைகள் பெற்றுள்ளது என்ற தகவலை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) ) திரட்டி உள்ளது. தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சிகள் சமர்பித்த நன்கொடை கணக்குகள் அடிப்படையில் இந்த தகவல்கள் திரட்டப்பட்டு உள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட தேசிய அரசியல் கட்சிகள் பா.ஜனதா, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை செப்டம்பர் 30, 2019க்குள் சமர்ப்பித்த விவரங்களில் இருந்து இந்த தகவல் திரட்டப்பட்டு உள்ளது.
2018-19 ஆம் ஆண்டில் மற்ற தேசிய அரசியல் கட்சிகளையும் விட பா.ஜனதா மூன்று மடங்கு அதிக நன்கொடைகளைப் பெற்று உள்ளது என அந்த தகவல்களில் தெரியவந்து உள்ளது.
தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்க வேண்டிய நன்கொடை கணக்குகளை பா.ஜனதா 31 நாட்கள் தாமதமாகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 21 நாட்களும், இந்திய கம்யூனிஸ்ட் மூன்று நாட்களும் தாமதமாக தாக்கல் செய்து உள்ளன என ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் வெளியிட்டு உள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது போன்ற நன்கொடைகளில் தேசிய கட்சிகள் மொத்தம் ரூ.1 951.66 கோடியை கணக்கு காட்டி உள்ளது. அதில் பெரும்பகுதி ரூ.742.15 கோடி பா.ஜனதா திரட்டி உள்ளது. இது 78 சதவிகிதம் அதிகமாகும்.
பா.ஜனதா அறிவித்த நன்கொடைகள் ஒரே காலகட்டத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்த மொத்த தொகையை விட மூன்று மடங்கு அதிகம் ஆகும்.
2018-19 நிதியாண்டில் ரூ. 20,000 க்கு மேல் எந்த நன்கொடைகளையும் பெறவில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சி அறிவித்து உள்ளது.
முந்தைய 2017-18 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது, தேசிய கட்சிகளின் அறிவிக்கப்பட்ட நன்கொடைகள் 2018-19 ஆம் ஆண்டில் 103 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
பா.ஜனதாவுக்கான நன்கொடைகள் 2017-18 ஆம் ஆண்டில் ரூ. 437.04 கோடியிலிருந்து 2018-19 ஆம் ஆண்டில் ரூ.742.15 கோடியாகவும், காங்கிரஸ் நன்கொடை ரூ.26.658 கோடியிலிருந்து ரூ.148.58 கோடியாகவும் அதிகரித்துள்ளது.
கட்சிகளுக்கு நன்கொடைகளில் பெரும் பகுதி மராட்டிய மாநிலம் மற்றும் பெருநிறுவனம் அல்லது வணிகத் துறை நன்கொடையாளர்களிடம் இருந்து வந்தது என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் கண்டறிந்து உள்ளது.
தேசிய கட்சிகள் மராட்டிய நன்கொடையாளர்களிடமிருந்து மொத்தம் ரூ.548.22 கோடியையும், அதைத் தொடர்ந்து டெல்லியில் இருந்து ரூ. 141.42 கோடியும், குஜராத்திலிருந்து ரூ.55.31 கோடியும் பெற்று உள்ளன.
மொத்த நன்கொடைகளில் 92 சதவிகிதம் ரூ. 876.11 கோடி பெருநிறுவனம் அல்லது வணிகத் துறையிலிருந்து வந்தது, அதே நேரத்தில் 509 தனிப்பட்ட நன்கொடையாளர்கள் ரூ. 71.407 கோடி அல்லது மொத்தத்தில் 7.5 சதவிகிதம் கொடுத்து உள்ளனர்.
பெருநிறுவனம் அல்லது வணிகத் துறை அளித்த ரூ. 1,776 நன்கொடைகளில், பா.ஜனதா 1,575 நன்கொடைகள் மூலம் மொத்தம் ரூ.698.092 கோடியை பெற்று உள்ளது. பெருநிறுவனம் அல்லது வணிகத் துறையின் 122 நன்கொடைகளில் இருந்து காங்கிரசுக்கு ரூ. 122.5 கோடி கிடைத்து உள்ளது.
நன்கொடை வழங்குவதில் டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முற்போக்கு தேர்தல் அறக்கட்டளை முதலிடத்தில் உள்ளது. இது பா.ஜனதா காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரசுக்கு மொத்தம் ரூ.455.15 கோடியை நன்கொடையாக வழங்கி உள்ளது.
Related Tags :
Next Story