மும்பையில் கொரோனாவில் இருந்து மீண்ட முதியவர் உயிரிழந்த பரிதாபம்


மும்பையில் கொரோனாவில் இருந்து மீண்ட முதியவர் உயிரிழந்த பரிதாபம்
x
தினத்தந்தி 23 March 2020 8:42 PM GMT (Updated: 23 March 2020 8:42 PM GMT)

மும்பையில் கொரோனாவில் இருந்து மீண்ட முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மும்பை,

மராட்டியத்தில் கொடிய கொரோனா வைரசுக்கு ஏற்கனவே 2 பேர் இரையாகி உள்ளனர். இந்த நிலையில் கொரோனாவில் இருந்து மீண்ட முதியவர் ஒருவர் உயிரிழந்த பரிதாபம் மும்பையில் நடந்து உள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து மும்பை திரும்பிய 68 வயது நபர் ஒருவர் உடல்நலக்குறைவால் மும்பை கஸ்தூர்பா ஆஸ்பத்திரியில் கடந்த 13-ந் தேதி அனுமதிக்கப்பட்டு இருந்தார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. தனிமை வார்டில் அவருக்கு அளித்த சிகிச்சையின் பேரில் குணமடைந்தார். மருத்துவ பரிசோதனையிலும் கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரியவந்தது. ஏற்கனவே நீரிழிவு மற்றும் ஆஸ்துமா இருந்ததால் அவர் அந்த நோய் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். கொரோனாவில் இருந்து மறுபிறவி எடுத்த அவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு சிறுநீரக செயல்பாடு நின்றதால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த முதியவர் கொரோனா நோய்க்கு உயிரிழக்கவில்லை என்று மத்திய அரசின் சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது.


Next Story