கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ‘ஆயுஷ்’ மருத்துவர்கள் முக்கிய பங்கு வகிக்க முடியும் - பிரதமர் மோடி சொல்கிறார்


கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ‘ஆயுஷ்’ மருத்துவர்கள் முக்கிய பங்கு வகிக்க முடியும் - பிரதமர் மோடி சொல்கிறார்
x
தினத்தந்தி 28 March 2020 11:30 PM GMT (Updated: 28 March 2020 11:29 PM GMT)

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதில் ஆயுஷ் மருத்துவர்கள் முக்கிய பங்கு வகிக்க முடியும் என்று பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

இந்த நிலையில் ஆயுஷ் மருத்துவர்கள் என்று அழைக்கப்படுகிற ஆயுர்வேத, யோகா-நேச்சுரபதி, யுனானி, சித்தா, ஓமியோபதி ஆகிய மாற்றுமுறை மருத்துவர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வழியாக நேற்று கலந்துரையாடினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இந்த நாட்டை ஆரோக்கியமானதாக வைத்திருப்பதில் ஆயுஷ் துறையினருக்கு மிக நீண்ட பாரம்பரியம் இருக்கிறது. இந்த துறையினர் நாடு முழுவதும் அனைத்து தளத்தில் பரந்து விரிந்து காணப்படுகிறார்கள். எனவே கொரோனா வைரஸ் தடுப்பில் இந்த மருத்துவத்தை அவர்கள் பயன்படுத்துவது முக்கியமாக அமைகிறது.

நீங்கள் (ஆயுஷ் மருத்துவர்கள்) உலக சுகாதார நிறுவனம் வகுத்துள்ள விதிமுறைகளின்கீழ் செயல்படுவதுடன், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு பின்பற்ற வேண்டிய நல்ல நடை முறைகளை பரப்ப வேண்டும். இதில் உங்களுக்கு முக்கிய பங்களிப்பு உள்ளது.

இந்த கொரோனா வைரஸ் சவாலை எதிர்கொள்வதற்கு ஒட்டுமொத்த சுகாதார பணியாளர்களையும் பயன்படுத்திக்கொள்வதற்கு நாடு தயாராக வேண்டும். தேவைப்படுகிறபோது, அரசு ஆயுஷ் துறையில் உள்ள தனியார் மருத்துவர்களின் உதவியையும் நாட வேண்டும்.

சானிடைசர் திரவம் போன்றவற்றுக்கு கிராக்கி அதிகரித்து வருகிற இந்த காலகட்டத்தில், இத்தகைய அத்தியாவசிய பொருட்களை தயாரிக்க ஆயுஷ் மருந்து தயாரிப்பாளர்கள் தங்களது வளங்களை பயன்படுத்த முடியும்.

கொரோனா வைரஸ் பரவி வருகிற நிலையில், மக்களிடம் போய்ச்சேரவும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் டெலிமெடி சின் (டாக்டர்களும், நோயாளிகளும் நேரடியாக சந்திக்காமல், காணொலி காட்சி வழியாக சந்தித்தல்) தளத்தை ஆயுஷ் மருத்துவர்கள் பயன்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.

கொரோனா வைரஸ் பிரச்சினையில், மக்களின் மன அழுத்தத்தை போக்கவும், உடலுக்கு பலம் அளிக்கவும் ஆயுஷ் அமைச்சகம் மேற்கொண்டு வருகிற யோகா அட் ஹோம் (வீட்டில் யோகா) திட்டத்தை பிரதமர் மோடி புகழ்ந்துரைத்தார்.

மேலும், கொரோனாவுக்கு ஆயுஷ் மருந்து உள்ளது என்று ஆதாரமற்று கூறுகிறபோது, அதில் உள்ள உண்மையை கண்டறிவதிலும், ஆயுஷ் விஞ்ஞானிகள், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், இந்திய அறிவியல் தொழில் ஆராய்ச்சி மற்றும் பிற ஆராய்ச்சி அமைப்புகள் அனைத்தும் ஆதாரம் அடிப்படையில் ஆராய்ச்சியை கொண்டு வர வேண்டியதின் அவசியத்தையும் பிரதமர் மோடி வலியுறுத்தி கூறினார்.

அதே போன்று கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதில் பிரதமர் மோடி எடுத்து வருகிற நடவடிக்கைகளை ஆயுஷ் மருத்துவர்கள் பாராட்டினர். நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்குவதில் பாரம்பரியமிக்க ஆயுஷ் மருந்துகளின் முக்கியத்துவத்தையும் அவர்கள் எடுத்துக் கூறினார்கள்.

Next Story