ரஷ்யாவிடம் இருந்து 33 போர் விமானங்கள் வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்


ரஷ்யாவிடம் இருந்து 33 போர் விமானங்கள் வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்
x
தினத்தந்தி 2 July 2020 11:22 AM GMT (Updated: 2 July 2020 11:26 AM GMT)

ரஷ்யாவிடம் இருந்து ரூ.18,148 கோடியில் 33 போர் விமானங்கள் வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

புதுடெல்லி, 

கடந்த சில தினங்களாக லடாக் எல்லை பகுதியில் இந்திய-சீன இடையே பதற்றம் நிலவி வருகிறது

இந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து ரூ.18,148 கோடியில் 33 போர் விமானங்கள் வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
 
தற்போது பயன்பாட்டில் உள்ள 59 மிக் -29 ரக விமானங்களை மேம்படுத்துவதோடு, 12 எஸ்.யு-30 எம்.கே.ஐ ரக விமானங்கள் மற்றும் 21 மிக்-29 ரக விமானங்கள் உட்பட ரஷ்யாவிலிருந்து 33 புதிய போர் விமானங்களை வாங்குவதற்கான திட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டங்களின் மொத்த செலவு ரூ .18,148 கோடியாக இருக்கும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் விமானப்படை மற்றும் கடற்படைக்கு 248 அஸ்திரா ஏவுகணைகள் வாங்கவும் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. 

இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய நாட்டு அதிபர் விளாமிர் புதினுடன் இன்று தொலைபேசியில் உரையாடினார். இரண்டாம் உலகப் போரில் ரஷ்யா வெற்றிப் பெற்ற 75 ஆண்டு நிறைவு விழாவுக்கும், ரஷ்யாவில் அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களுக்கு வாக்களிப்பது வெற்றிகரமாக நிறைவேறி உள்ளதற்கும் பிரதமர் மோடி, புதினுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story