காஷ்மீரில் மெகபூபா முப்திக்கு மேலும் 3 மாதங்கள் வீட்டுக் காவல் நீட்டிப்பு


காஷ்மீரில் மெகபூபா முப்திக்கு மேலும் 3 மாதங்கள் வீட்டுக் காவல் நீட்டிப்பு
x
தினத்தந்தி 31 July 2020 4:07 PM GMT (Updated: 31 July 2020 4:07 PM GMT)

பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மெகபூபா முப்தியின் வீட்டுக் காவலை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பிற்கு முதல் நாள் இரவில் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, அவரின் மகனும் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா ஆகியோர் மீது பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் காஷ்மீர் நிர்வாகம் அறிவித்தது.

பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டால், விசாரணையின்றி ஓராண்டு வரை காவலில் வைத்திருக்க முடியும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து வீட்டுக் காவலில் இருந்த உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா ஆகிய இருவரும் கடந்த மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டனர்.

ஆனால் மெகபூபா முப்தியை விடுவிப்பது குறித்து எந்த முடிவையும் காஷ்மீர் நிர்வாகம் எடுக்கவில்லை. இந்நிலையில் மெகபூபா முப்திக்கு விதிக்கப்பட்டிருந்த பொது பாதுகாப்புச் சட்டம் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதியுடன் முடிவதால், காவலை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து, ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Next Story