விமானத்துக்குள் புகைப்படம் எடுத்தால் நடவடிக்கை; சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவிப்பு


விமானத்துக்குள் புகைப்படம் எடுத்தால் நடவடிக்கை; சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவிப்பு
x
தினத்தந்தி 12 Sep 2020 10:19 PM GMT (Updated: 12 Sep 2020 10:19 PM GMT)

விமானத்துக்குள் புகைப்படம் எடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

புதுடெல்லி,

சண்டிகாரில் இருந்து சமீபத்தில் மும்பை வந்த இண்டிகோ விமானம் ஒன்றில், இந்தி நடிகை கங்கனா ரணாவத் பயணம் செய்தார். அப்போது விமானத்துக்குள் அவரிடம் செய்தியாளர்கள் நெருக்கமாக நின்று பேட்டி கண்டனர். இது தொடர்பான புகைப்படம் வெளியாகி இருந்தது.

இதைத்தொடர்ந்து விமான பாதுகாப்பு மற்றும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாகவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறும் இண்டிகோ நிறுவனத்துக்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் (டி.ஜி.சி.ஏ.) உத்தரவிட்டு உள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து விமானத்துக்குள் புகைப்படம் எடுக்க டி.ஜி.சி.ஏ. தடை விதித்து உள்ளது.

மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் டி.ஜி.சி.ஏ.வின் அனுமதி இன்றி விமானத்துக்குள் புகைப்படம் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ள டி.ஜி.சி.ஏ., மீறி யாராவது விமானத்துக்குள் புகைப்படம் எடுத்தால், மறுநாள் முதல் 2 வாரங்களுக்கு குறித்த தடத்தில் அந்த நிறுவனத்தின் விமான போக்குவரத்து ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்து உள்ளது.

மேலும் விதிமீறலுக்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னரே, விமான போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும் எனவும் டி.ஜி.சி.ஏ. கூறியுள்ளது.

Next Story