ஹரியானாவில் பட்டப்பகலில் இளம்பெண் சுட்டுக்கொலை; 2 பேர் கைது


ஹரியானாவில் பட்டப்பகலில் இளம்பெண் சுட்டுக்கொலை; 2 பேர் கைது
x
தினத்தந்தி 27 Oct 2020 9:45 AM GMT (Updated: 27 Oct 2020 9:45 AM GMT)

ஹரியானாவில் இரண்டு வாலிபர்கள் பட்டப்பகலில் இளம்பெண் ஒருவரை சுட்டுகொன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சண்டிகர்,

ஹரியானா மாநிலம் பல்லாப்கர் பகுதியில் நேற்று மதியம் 3.30 மணியளவில் கல்லூரிக்கு தேர்வு எழுதுவதற்காக வந்த பெண்ணை கல்லூரி வளாகத்திற்கு வெளியே இரண்டு நபர்கள் சுட்டுக்கொன்ற சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

அதில் காரில் வந்த இரண்டு இளைஞர்கள் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கும் பெண்களை வழிமறித்து அவர்களில் ஒரு பெண்ணை காரில் ஏற்ற முயற்சி செய்கின்றனர். சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின்னர் அந்த இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அந்த பெண்ணை நோக்கி சுட்டுவிட்டு, பின்னர் காரில் ஏறி தப்பிச் செல்கிறார். இந்த சம்பவம் முழுவதும் கேமராவில் பதிவாகியுள்ளது.

துப்பாகியால் சுடப்பட்ட அந்த பெண் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கத் தொடங்கினர்.

இதனை தொடர்ந்து உயிரிழந்த அந்த பெண்ணின் பெயர் நிகிதா(வயது 21) என்பதும், கல்லூரியில் இறுதி ஆண்டு தேர்வு எழுத வந்த அவர் கல்லூரி வளாகத்திற்கு வெளியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தௌஃபீக் மற்றும் ரீஹான் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story