2 கோடி கையெழுத்துடன் ஜனாதிபதியிடம் இன்று மனு வழங்குகிறார், ராகுல் காந்தி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 24 Dec 2020 12:46 AM GMT (Updated: 24 Dec 2020 12:46 AM GMT)

வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2 கோடி கையெழுத்துடன் ராகுல் காந்தி இன்று ஜனாதிபதியிடம் மனு வழங்க உள்ளார்.

புதுடெல்லி, 

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் ஒருபுறம் போராடி வரும் நிலையில், இந்த சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதிலும் இருந்து, வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த 2 கோடி பேரிடம் அந்த கட்சியினர் கையெழுத்து பெற்று உள்ளனர்.

இந்த கையெழுத்துடன் மனு ஒன்றை, அதாவது விவசாயிகளின் போராட்ட விவகாரத்தில் ஜனாதிபதி தலையிட்டு வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரும் மனுவை காங்கிரஸ் கட்சி தயாரித்து உள்ளது. இந்த மனுவை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று (வியாழக்கிழமை) கட்சியினருடன் சென்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் வழங்குகிறார்.

முன்னதாக டெல்லி விஜய் சவுக் பகுதியில் காலையில் ராகுல் காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்திலும் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்.

விவசாயிகள் பிரச்சினையில், நடைமுறைக்கேற்ற அணுகுமுறையை பின்பற்றுமாறு பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ள காங்கிரஸ் கட்சி, அதன் மூலம் விவசாயிகளின் துயரங்களை போக்குமாறும் வலியுறுத்தி உள்ளது.


Next Story