லடாக் எல்லைக்குள் நுழைந்த சீன ராணுவ வீரர் திரும்ப ஒப்படைப்பு: இந்திய ராணுவம்


லடாக் எல்லைக்குள் நுழைந்த சீன ராணுவ வீரர் திரும்ப ஒப்படைப்பு:  இந்திய ராணுவம்
x
தினத்தந்தி 11 Jan 2021 6:53 AM GMT (Updated: 11 Jan 2021 6:53 AM GMT)

லடாக் எல்லைக்குள் நுழைந்த சீன ராணுவ வீரர் இன்று காலை சீனாவிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டு விட்டார் என இந்திய ராணுவம் தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

லடாக்கில் இந்திய, சீன எல்லையில் கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் தொடங்கி சீனா தொடர்ந்து அத்துமீறி வருகிறது.  கடந்த ஆண்டு ஜூன் 15-ந் தேதி கல்வான் பள்ளத்தாக்கு பகுதியிலும், சென்ற ஆகஸ்டு 29-ந் தேதி கிழக்கு லடாக் பகுதியில் பங்கோங் சோ ஏரி பகுதியிலும் சீன துருப்புகள் அத்துமீறி ஆக்கிரமிக்க முயற்சித்தபோது இந்திய படைகள் பதிலடி கொடுத்து அந்த முயற்சியை தடுத்தன.

ஒரு பக்கம் பேச்சுவார்த்தைக்கு அழைத்து விட்டு, மறுபக்கம் தொடர்ந்து ஆக்கிரமிப்பு வேலையில் சீனா ஈடுபட்டு வந்தது. கடந்த செப்டம்பர் 7-ந் தேதி இரவு சீன துருப்புகள் பயங்கரமான ஆயுதங்களுடன் அசல்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அமைந்துள்ள இந்தியாவின் முன்னோக்கிய நிலைகளில் ஒன்றை நோக்கி நெருங்கி வர முயற்சித்தன. அதை இந்திய படை வீரர்கள் தடுக்க முயற்சித்தபோது, அவர்களை பயமுறுத்த துப்பாக்கி சூடு நடத்தி விட்டு பழியை இந்தியா மீது போட்டது.

இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.  தொடர்ந்து கடுமையான நிலைப்பாட்டை எடுத்தது.  இதனால், எல்லையில் இருந்து சீன துருப்புகள் முகாம்களுக்கு விரைவில் திரும்பி விடும் என சீனா கூறியது. ஆனாலும் தொடர்ந்து எல்லையில் படைகளை குவித்து, பதற்ற நிலையை நீடித்தது.

இதன்பின்னர் இரு நாட்டு தளபதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, இந்தியா மற்றும் சீன படைகளை எல்லையில் இருந்து திரும்ப பெற்று கொள்வது என முடிவு செய்யப்பட்டது.  இதனால் எல்லை பகுதியில் சற்று பதற்றம் தணிந்து காணப்படுகிறது.

இந்நிலையில், லடாக்கில் அசல் கட்டுப்பாட்டு கோடு அமைந்த இந்திய பகுதியில், பங்கோங் சோ ஏரிக்கு தெற்கே, அனுமதியின்றி சீன ராணுவ வீரர் ஒருவர் கடந்த 8ந்தேதி காலையில் அத்துமீறி நுழைந்து விட்டார்.  அவரை எல்லை பகுதியில் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு இருந்த இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதன்பின்னர் அவரை ராணுவ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.  அவர் தவறுதலாக இந்திய எல்லைக்குள் நுழைந்து விட்டார் என கூறப்பட்டது.  இதனால் அவரை சீனாவிடம் திரும்ப ஒப்படைக்கும் பணிகள் நடந்தன.

இதன்படி, சுசுல்-மோல்டோ பகுதியில் வைத்து சீனாவிடம் இன்று காலை 10.10 மணிக்கு சீன ராணுவ வீரர் திரும்ப ஒப்படைக்கப்பட்டார்.  இதனை இந்திய ராணுவம் தெரிவித்து உள்ளது.

Next Story