டெல்லி போராட்டத்தில் பீட்சா, பிரியாணி; போலி விவசாயிகள் என பா.ஜ.க. எம்.பி. குற்றச்சாட்டு


டெல்லி போராட்டத்தில் பீட்சா, பிரியாணி; போலி விவசாயிகள் என பா.ஜ.க. எம்.பி. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 12 Jan 2021 5:09 AM GMT (Updated: 12 Jan 2021 5:09 AM GMT)

டெல்லி போராட்டத்தில் விவசாயிகள் என்ற பெயரில் இடைத்தரகர்கள் உள்ளனர் என பா.ஜ.க. எம்.பி. குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேச மாநிலங்களில் இருந்து வந்துள்ள இந்த விவசாயிகள் டெல்லி எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டதால் அங்கேயே போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள விவசாயிகளில் சிலர், தங்களது சொந்த ஊரில் இருந்து கிளம்புவதற்கு முன் அடுத்த 6 மாதங்களுக்கு தேவையான உணவு பொருட்களை உடன் எடுத்து செல்கிறோம் என கூறினர்.

விவசாயிகளின் நலனுக்காக விவசாய சங்கம் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் சார்பில் காலையில் தேநீர், மதிய உணவு மற்றும் இரவு நேர உணவு உள்ளிட்டவையும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர், அங்கேயே ஜிம் அமைத்து உடற்பயிற்சி மேற்கொள்வது, நெட் அமைத்து வாலிபால் விளையாடுவது போன்ற புத்துணர்வு பெறும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  அவர்களுக்காக இயங்கும் கழிவறைகள், குளிர்காலத்திற்கு தேவையான போர்வை, விரிப்புகள் மற்றும் கால்களுக்கு வேண்டிய காலுறைகள் போன்றவையும் வழங்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், கர்நாடகாவை சேர்ந்த கோலார் தொகுதி பா.ஜ.க. எம்.பி. முனிசாமி கூறும்பொழுது, டெல்லி எல்லைகளில் விவசாயிகள் என்ற பெயரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் பணம் கொடுத்து போராட்ட பகுதிகளுக்கு அழைத்து வரப்பட்டவர்கள்.

அவர்கள் எல்லாம் இடைத்தரகர்கள்.  போலியான விவசாயிகள்.  பீட்சா, பர்கர் மற்றும் கே.எப்.சி. தயாரிப்புகளை சாப்பிட்டு கொண்டிருக்கின்றனர்.  ஜிம் அமைத்து இருக்கின்றனர்.  இந்த நாடகம் நிறுத்தப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

கடந்த டிசம்பர் 12ந்தேதி கோலார் மாவட்டத்தில் விஸ்டிரான் என்ற தனியார் நிறுனம் மீது நடந்த வன்முறை தாக்குதல் பற்றிய கேள்விக்கு பதிலளித்த முனிசாமி, தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்படவில்லை.  அதனால் தாக்குதல் நடந்துள்ளது.

இதில், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் வழியே கம்யூனிஸ்டுகாரர்களும் இணைந்து கொண்டனர்.  இந்த வன்முறையில் சீனாவுடன் தொடர்பிருக்கும் என நினைக்கிறேன்.  பிற நிறுவனங்கள் இந்தியாவுக்கு வர கூடாது என உறுதி செய்வதற்காக கம்யூனிஸ்டுகளுடன் சேர்ந்து கொண்டு சீனா இந்த செயலில் ஈடுபடுகிறது என கூறியுள்ளார்.

Next Story