மராட்டிய மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று மீண்டும் தொடங்கியது


மராட்டிய மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று மீண்டும் தொடங்கியது
x
தினத்தந்தி 19 Jan 2021 9:05 AM GMT (Updated: 19 Jan 2021 9:05 AM GMT)

மராட்டியத்தில் 2 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

மும்பை,

நாடு முழுவதும் கடந்த சனிக்கிழமை கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதில் ‘கோ-வின்’ செயலியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மராட்டியத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஸ் தோபோ பேசுகையில், “கோ-வின் செயலியை பயன்படுத்துவதில் பல பிரச்சினைகள் ஏற்பட்டதால், அதை பயன்படுத்தாமல் தடுப்பூசியை செலுத்த மத்திய அரசிடம் அனுமதி கேட்டு உள்ளோம். மத்திய அரசின் பதிலுக்காக காத்து இருக்கிறோம்” என்று கூறினார்.

இந்த நிலையில் நேற்று மாலை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் தலைமை செயலாளர் சஞ்சய் குமார், முதல்-மந்திரியின் முதன்மை ஆலோசகர் அஜய் மேத்தா மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

பின்னர் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே செய்தியாளர்களிடம் பேசிய போது, “கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் தொடங்கப்படும். வாரத்தில் 4 நாட்கள் 285 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெறும். ஒவ்வொரு மையத்திலும் தலா 100 பேருக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது” என்று தெரிவித்தார். 

அதன்படி இன்று காலை மும்பை, புனே உள்ளிட்ட நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போடும் பணி துவங்கியது. இருப்பினும் காலை வேளையில் தடுப்பூசி போடுவதற்கு மிகக் குறைந்த அளவிலேயே மக்கள் வருகை தந்ததாகவும், அதன் பிறகு மக்களின் வருகை சிறிது அதிகரித்ததாகவும் மருத்துவப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். 

Next Story