வெளிநாட்டு தூதர்கள் ஜம்மு காஷ்மீர் வருகை: இன்றும் நாளையும் ஆய்வு
குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணியின் (பிஏஜிடி) தலைவரை தூதர்கள் சந்திப்பார்களா? என்பது உறுதி செய்யப்படவில்லை.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டம் மற்றும் வன்முறை ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், முன்னெச்சரிக்கையாக ஏராளமான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. முக்கிய தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
இதனால் எழுந்த அரசியல் விமர்சனங்களைத் தொடர்ந்து வெளிநாடுகளின் தூதர்கள் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். ஜம்மு காஷ்மீரில் அமைதியான சூழலையும் இயல்பு நிலையையும் கொண்டு வர எடுக்கப்பட்ட முயற்சிகளை வெளி நாடுகளுக்கு எடுத்துக் காட்டும் வகையில் வெளிநாடுகளின் தூதர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பல்வேறு நாடுகளின் தூதர்கள் பயணம் மேற்கொண்டு, ராணுவத்தினர், அரசியல் தலைவர்களை சந்தித்து நிலைமைய ஆராய்ந்தனர். அதன்பின்னர் கொரோனா அச்சம், பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக இந்த பயணம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளின் தூதர்கள் உள்ளிட்ட 20 வெளிநாட்டு தூதர்கள் இன்று முதல் 2 நாட்கள் ஜம்மு காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். பட்காம் மாவட்டம் சென்ற வெளிநாட்டு தூதர்கள் உள்ளூர் மக்களுடன் கலந்துரையாடினர்.
Related Tags :
Next Story