இனிமேல் எந்த தேர்தலிலும் ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி கிடையாது: சித்தராமையா


சித்தராமையா
x
சித்தராமையா
தினத்தந்தி 14 March 2021 9:00 PM GMT (Updated: 14 March 2021 9:00 PM GMT)

இனிமேல் எந்த தேர்தலிலும் ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி கிடையாது என்று மைசூருவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கூட்டணி கிடையாது

மைசூருவுக்கு முன்னாள் முதல்-மந்திரியும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா வந்தார். முன்னதாக ைமசூரு மண்டகள்ளி விமான நிலையத்தில் சிறப்பு விமானத்தில் சித்தராமையா வந்திறங்கினார். அப்போது விமான நிலையத்தில் சித்தராமையாவை, காங்கிரசார் வாழ்த்து கோஷமிட்டு உற்சாகமாக வரவேற்றனர்.

பின்னர் சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மைமுல்(மைசூரு பால் டைரி) தலைவர் பதவி தேர்தலில் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி வைக்காது. மைமுல் தலைவர் தேர்தல் மட்டுமல்ல, இனிமேல் எந்த தேர்தலிலும் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி வைக்காது. குமாரசாமி மட்டுமல்ல, யார் கேட்டுக் கொண்டாலும் ஜனதா தளம்(எஸ்) கட்சி உடனான கூட்டணி சாத்தியம் இல்லை. கூட்டுறவு சங்க தேர்தல்கள் கட்சி சின்னத்தை வைத்து நடக்காது. சுதந்திரமாக நடக்கிற தேர்தல். அதனால் அந்தத் தேர்தலுக்கும், நமக்கும் சம்மந்தம் இல்லை.

உண்மை வெளிவரும்

ரமேஷ் ஜார்கிகோளி ஆபாச வீடியோவில் டி.கே.சிவக்குமாருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுவதற்கு நான் எந்த கருத்தும் தெரிவிக்கமாட்டேன். இந்த சி.டி. விவகாரத்தில் தன்னை மாட்டிவிடுகிறார்கள் என்பதை அவரே தெரிவித்துள்ளார்.

இந்த ஆபாச வீடியோ தொடர்பாக எஸ்.ஐ.டி. விசாரணை நடந்து வருகிறது. அந்த விசாரணையின் முடிவில் உண்மைகள் வெளிவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக சித்தராமையாவிடம், எச்.டி.குமாரசாமி பேசியது குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டனர். அப்போது சித்தராமையா, குமாரசாமி பேச்சுக்கெல்லாம் பதில் அளிக்க மாட்டேன் என்று கூறினார். சமீபத்தில் மைசூரு மாநகராட்சியை ஜனதாதளம்(எஸ்) கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.


Next Story