காஷ்மீர் என்கவுண்டர் : பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே மோதல்


காஷ்மீர் என்கவுண்டர் : பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே  மோதல்
x
தினத்தந்தி 10 April 2021 1:04 PM GMT (Updated: 10 April 2021 1:04 PM GMT)

காஷ்மீரின் 2 வேறு பகுதிகளில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.

ஸ்ரீநகர், 

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காஷ்மீரின் சோபியான் மாவட்டம் ஹண்டிபுரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் இன்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

அதேபோல், காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பிஜ்பிஹாரா பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதனால், அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர் பதிலடி தாகுதல் நடத்தி வருகின்றனர். இருவேறு பகுதிகளிலும் தொடர்ந்து துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.

இந்த துப்பாக்கிச்சண்டையில் 3-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் ஈடுபட்டிருக்கலாம் என்று பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

Next Story