மராட்டிய மருத்துவமனையில் தீ விபத்து: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு; வழக்கு பதிவு


மராட்டிய மருத்துவமனையில் தீ விபத்து:  பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு; வழக்கு பதிவு
x
தினத்தந்தி 23 April 2021 5:59 PM GMT (Updated: 23 April 2021 5:59 PM GMT)

மராட்டியத்தில் கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்து உள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. அம்மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.  கடந்த 24 மணிநேரத்தில் 66,836 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  773 பேர் உயிரிழந்து உள்ளனர்.

அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த அரசும் தீவிர முயற்சி எடுத்து வருகிறது.  தடுப்பூசி பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.  எனினும், சில இடங்களில் போதிய தடுப்பூசிகள் கிடைக்கப்பெறவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இந்த நிலையில், மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம் வசாய் நகரில் விரார் என்ற இடத்தில் உள்ள விஜய் வல்லப என்ற கொரோனா சிகிச்சை மருத்துவமனையில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  தீ விபத்து ஏற்பட்டதும் உடனடியாக அங்கிருந்த நோயாளிகள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.  

இதற்கிடையே, கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளிகளில் 12 பேர்  தீ விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருந்தன.  இந்நிலையில், இந்த எண்ணிக்கை 15 ஆக உயர்ந்து உள்ளது.    வசாய்-விரார் மாநகராட்சியின் சுகாதார துறையை சேர்ந்த டாக்டர் கிஷோர் கவாஸ் இதனை தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி மருத்துவமனையின் பணியாளர்கள், நிர்வாகம் மற்றும் மருத்துவர் ஒருவர் மீது ஐ.பி.சி.யின் பல்வேறு பிரிவுகளின் கீழ் அர்னாலா காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளது.  இதனை காவல் துறையின் துணை ஆணையாளர் சஞ்சய் பாட்டீல் தெரிவித்து உள்ளார்.


Next Story