அனைவருக்கும் இலவச தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை; பா.ஜ.க.வின் நிர்வாக முறைக்கு இந்தியாவை பலியாக்கி விடாதீர்கள்; ராகுல் காந்தி விமர்சனம்


அனைவருக்கும் இலவச தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை; பா.ஜ.க.வின் நிர்வாக முறைக்கு இந்தியாவை பலியாக்கி விடாதீர்கள்; ராகுல் காந்தி விமர்சனம்
x
தினத்தந்தி 26 April 2021 8:11 PM GMT (Updated: 26 April 2021 8:11 PM GMT)

பா.ஜ.க.வின் நிர்வாக முறைக்கு இந்தியாவை பலியாக்கி விடாதீர்கள். அனைவருக்கும் இலவச தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

விலை நிர்ணயம்

மே 1-ந் தேதி முதல் 18 வயது முதல் 45 வயதுள்ள மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதித்துள்ளது. தடுப்பூசி நிறுவனங்களே விலை வைக்கவும் அனுமதித்தது. இதன்படி, சீரம் நிறுவனம் தனது கோவிஷீல்டு தடுப்பூசியை மத்திய அரசுக்கு ரூ.150 விலையிலும், மாநில அரசுகளுக்கு ரூ.400 விலையிலும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 விலையிலும் வழங்குவதாக அறிவித்தது.

இலவச தடுப்பூசி

அதேபோல பாரத் பயோடெக் நிறுவனம் தனது கோவேக்சின் தடுப்பூசியை மத்திய அரசுக்கு ரூ.150 விலையிலும், மாநில அரசுகளுக்கு ரூ.600 விலையிலும், தனியாருக்கு ரூ.1,200 விலையிலும் வழங்குவதாக அறிவித்தது.

தடுப்பூசிகள் அனைத்துக்கும் ஒரே மாதியான விலை வைக்க வேண்டும், 5 விதமான விலை இருக்கக்கூடாது, மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது.

பலிகடா ஆக்காதீர்கள்

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அனைத்து மக்களுக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்கிட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தன்னுடைய டுவிட்டர் பதிவில், “கொரோனா தடுப்பூசி குறித்து நீங்கள் விவாதித்தது போதும். மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். பா.ஜ.க.வின் நிர்வாக முறைக்கு இந்தியாவை பலிகடா ஆக்காதீர்கள்” என தெரிவித்தார்.

பாகுபாடு

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா காணொலி மூலம் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை பாகுபாடு கொண்டது, உணர்வற்றது. ஏழைகளுக்கும், இளைஞர்களுக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்கும் பொறுப்பில் இருந்து மத்திய அரசு நழுவிவிட்டது. எவ்வாறு இதுபோன்ற தடுப்பூசிகளை தனியார் நிறுவனங்கள் லாபம் ஈட்டுவதற்கு அனுமதிக்கலாம். இதற்கு பிரதமர் மோடி கண்டிப்பாக பதில் அளிக்க வேண்டும்.

லாபம் ஈட்ட கூடாது

மக்களுக்கு சேவை செய்யும் இந்த பணியில் யாரும் லாபம் ஈட்ட கூடாது. ஒரு தேசம், ஒரு தடுப்பூசி விலை என்று நாங்கள் கூறுவதற்கு பதிலாக, ஒரு தேசம், ஒரு தடுப்பூசிக்கு 5 விலை என்று மத்திய அரசு கொண்டு வந்தமைக்கு மத்திய சுகதாாரத்துறை மந்திரி பதில் அளிக்க வேண்டும்.

சீரம் நிறுவனம், பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு தடுப்பூசி மூலம் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 100 கோடி லாபம் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story