நடுவானில் பறந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்திற்குள் கிடந்த வவ்வால் - விமானத்தை அவசரமாக தரையிறக்கிய விமானி


நடுவானில் பறந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்திற்குள் கிடந்த வவ்வால் - விமானத்தை அவசரமாக தரையிறக்கிய விமானி
x
தினத்தந்தி 28 May 2021 2:00 PM GMT (Updated: 28 May 2021 2:00 PM GMT)

டெல்லியில் இருந்து அமெரிக்காவுக்கு சென்ற ஏர் இந்தியா விமானத்தில் உயிரிழந்த நிலையில் வவ்வால் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் இருந்து அமெரிக்காவின் நியூஜெர்சிக்கு ஏர் இந்தியா விமானம் இன்று அதிகாலை 2.20 மணிக்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் பயணிகள், விமான ஊழியர்கள் உள்பட பலர் பயணித்தனர்.

டெல்லியில் இருந்து ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட 30 நிமிடத்தில் விமானத்தின் முதல் தர (பிசினஸ் கிளாஸ்) இருக்கை பிரிவில் வல்வால் ஒன்று உயிரிழந்த நிலையில் கிடப்பதை விமான ஊழியர்கள் கண்டுபிடித்தனர். இது குறித்து, விமானிக்கு ஊழியர்கள் தகவல் கொண்டுத்தனர்.

இதனை தொடர்ந்து நடு வானில் பறந்துகொண்டிருந்த விமானத்தை விமானி அவசர அவசரமாக டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கினார். பின்னர் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு விமானத்திற்குள் கிடந்த உயிரிழந்த வவ்வால் அப்புறப்படுத்தப்பட்டது. பயணிகள் அனைவரும் மாற்று விமானம் மூலம் நியூஜெர்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ஏர் இந்தியா விமானத்தில் உயிரிழந்த நிலையில் வவ்வால் கண்டுபிடிக்கப்பட்டதால் டெல்லியில் இருந்து அமெரிக்கா சென்றுகொண்டிருந்த விமானம் நடுவானில் திருப்பப்பட்டு மீண்டும் டெல்லியிலேயே தரையிரக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும், விமானத்திற்குள் உயிரிழந்த நிலையில் வவ்வால் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் விசாரணை நடத்தி வருகிறது.

Next Story