திரவ மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி 10 மடங்கு அதிகரிப்பு - பிரதமர் மோடி தகவல்
மருத்துவ பயன்பாட்டிற்கான திரவ ஆக்சிஜன் உற்பத்தி 10 மடங்கு அதிகரித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடி, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று அகில இந்திய வானொலியின் ‘மனதின் குரல்’ (மன்கிபாத்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுடன் பேசி வருகிறார். அந்த வகையில் நேற்று அவர் நாட்டு மக்களுடன் பேசுகையில் கூறியதாவது;-
“ஆக்சிஜன் பற்றாக்குறையயை போக்குவதற்கு வெளிநாட்டு நன்கொடையாளர்களிடம் இருந்து அவசர மருத்துவ உதவிகள் வந்தது. தனியார் தொழிற்சாலைகளில் இருப்பு உட்பட தயாரிக்கப்படும் அனைத்து திரவ ஆக்சிஜனும் மருத்துவ நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என அரசு அறிவுறுத்தியது.
மாநிலங்களின் அவசர ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டன. கொரோனாவுக்கு எதிரான இந்த போர் நமது ரயில்வேயை போன்று மிகப்பெரியது. நீர், நிலம், வான் வழிகளில் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்வதற்கான கடற்படை, ராணுவம், விமானப்படை பணியாற்றி வருகின்றது.
நாடு வழக்கமாக ஒரு நாளில் 900 டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் தான் உற்பத்தி செய்து வந்தது. தற்போது அதன் உற்பத்தி 10 மடங்கு அதிகரித்து, நாள் ஒன்றுக்கு 9,500 டன் உற்பத்தி நடைபெறுகிறது. நமது வீரர்கள் இந்த ஆக்சிஜனை நாட்டின் மூலை முடுக்குகளுக்கும் கொண்டு செல்கிறார்கள்.”
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story