ஒடிசா: பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் நக்சலைட்டு பலி


ஒடிசா: பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் நக்சலைட்டு பலி
x
தினத்தந்தி 11 Jun 2021 6:47 AM GMT (Updated: 11 Jun 2021 6:47 AM GMT)

ஒடிசா மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே துப்பாக்கிச்சண்டை ஏற்பட்டது.

புவனேஷ்வர்,

இந்தியாவின் சில மாநிலங்களில் உள்ள காட்டுப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகள் குழுக்களாக வாழ்ந்துவருகின்றனர். இவர்கள் போலீசார், கிராமப்புற மக்களை குறிவைத்து அவ்வப்போது தாக்குதலை நடத்தி வருகின்றனர். 

இந்த நக்சலைட்டுகள், மாவோயிஸ்ட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட சில மாநிலங்களில் காவல்துறையில் சிறப்பு போலீஸ் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. 

இவர்கள் நக்சலைட்டுகள், மாவோயிஸ்ட்டுகள் பதுங்கியுள்ள பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு தேடுதல் வேட்டையில் ஈடுபடும் போலீசாரை குறிவைத்து நக்சலைட்டுகள், மாவோயிஸ்ட்டுகளும் தாக்குதலில் ஈடுபட்டு வரும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் பர்ஹர்க் மாவட்டம் படம்ப்பூரில் உள்ள காட்டுப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் இன்று அந்த காட்டுப்பகுதிக்குள் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது, அங்கு பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலுக்கு போலீசாரும் தக்கபதிலடி கொடுத்தனர். இருதரப்பினருக்கும் இடையே சிலமணிநேரம் சண்டை நீடித்தது. இந்த மோதலின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சண்டையில் நக்சலைட்டுகள் அமைப்பின் மூத்த தலைவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.

எஞ்சிய நக்சலைட்டுகள் அப்பகுதியை விட்டு தப்பிச்சென்றுவிட்டனர். உயிரிழந்த நக்சலைட்டின் உடலை கைப்பற்றிய போலீசார் அவனிடம் இருந்த ஏகே 47 ரக துப்பாக்கியையும், வெடிபொருட்களையும் கைப்பற்றினர். தப்பியோடிய நக்சலைட்டுகளை தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Next Story