கோவிஷீல்டு தடுப்பூசி இடைவெளியை குறைக்க மனு; டெல்லி ஐகோர்ட்டு மறுப்பு


கோவிஷீல்டு தடுப்பூசி இடைவெளியை குறைக்க மனு; டெல்லி ஐகோர்ட்டு மறுப்பு
x
தினத்தந்தி 15 July 2021 2:08 PM GMT (Updated: 15 July 2021 2:15 PM GMT)

கோவிஷீல்டு தடுப்பூசி தவணைக்கான இடைவெளியை குறைக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு டெல்லி ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்தது.

கோவிஷீல்டு தடுப்பூசி தவணைக்கான இடைவெளியை குறைக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு டெல்லி ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்தது.

தடுப்பூசி

இந்தியாவில் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசி கோவிஷீல்டு. இந்த தடுப்பூசியின் முதல் மற்றும் 2-வது டோஸ்களுக்கான இடைவெளியை 12 முதல் 16 வாரங்களாக நீட்டிக்கும்படி டாக்டர் என்.கே.அரோரா தலைமையிலான கொரோனா நிபுணர் குழு பரிந்துரைத்தது. இதை மத்திய அரசு கடந்த மே மாதம் ஏற்றுக்கொண்டது. இந்த மாற்றத்தை அடுத்து, கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் மற்றும் 2-வது டோஸ்களுக்கான இடைவெளி 12 முதல் 16 வாரங்களாக மாற்றப்பட்டது. அதாவது தடுப்பூசி செலுத்தி கொள்பவர்கள் முதல் டோஸ் போட்ட தேதியில் இருந்து, குறைந்தபட்சம் 84 நாட்களுக்கு பின்பே 2-வது டோஸ் தடுப்பூசியை செலுத்தி கொள்ள முடியும்.

மனுதாக்கல்

இந்நிலையில் 50 வயதுக்கு மேற்பட்டோருக்கும் இணை நோய் உள்ளவர்களுக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி தவணைக்கான இடைவெளியை குறைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை டாக்டர் சித்தார்த் தே என்பவர் தாக்கல் செய்தார். அந்த மனு விசாரணைக்கு வந்தது. டாக்டர் சார்பில் வக்கீல் குல்தீப் ஜவ்ஹாரி வாதடும் போது “இங்கிலாந்து ஆய்வுகளின்படி, புதிய வகை கொரோனா வைரஸ்களில் இருந்து காக்க தடுப்பூசிக்கான இடைவெளியை குறைக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

தள்ளுபடி

அப்போது நீதிபதிகள் கூறும்போது, “தடுப்பூசி இடைவெளி நடைமுறை பற்றி ஏதேனும் உங்களுக்கு தெரியுமா?. தடுப்பூசி டோஸ்கள் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகின்றன?. இதை யார் செய்கிறார்கள்?. நாங்கள் இது குறித்து மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப விரும்பவில்லை. இந்த மனுவை தள்ளுபடி செய்வோம்” என்று தெரிவித்தனர்.

இதையடுத்து வக்கீல், “நேர்மையான முறையில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு இது” என்று தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள், “உங்களின் நேர்மையை சந்தேகிக்கவில்லை. எனினும் மனு தள்ளுபடி என்பது நேர்மையின்மைக்கான சான்றிதழ் அல்ல” என்று தெரிவித்தனர். இதையடுத்து ஜவ்ஹாரி, மனுவை திரும்ப பெறுவதாக அறிவித்தார்.


Next Story