அசாம் - மிசோரம் எல்லை பிரச்சினை தொடர்பான அமைதி தீர்வுக்கு மத்திய அரசு முயற்சி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 2 Aug 2021 12:46 AM GMT (Updated: 2 Aug 2021 1:00 AM GMT)

அசாம் - மிசோரம் எல்லை பிரச்சினை தொடர்பான அமைதி தீர்வுக்கு மத்திய அரசு முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கவுகாத்தி,

வடகிழக்கு மாநிலங்களிடையே எல்லைப் பிரச்சினை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அசாம் - மிசோரம் எல்லையில் சமீபத்தில் வன்முறை வெடித்தது. இந்த மோதலில் அசாம் போலீசார் ஆறு பேர் பலியாயினர்.

'மிசோரமுக்கு யாரும் செல்ல வேண்டாம்' என அசாம் மக்களை அம்மாநில முதல்-மந்திரியும், பாஜக மூத்த தலைவருமான, ஹிமாந்த பிஸ்வா சர்மா கூறினார். இதற்கு மிசோரம் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த சூழலில் அசாம் - நாகாலாந்து எல்லையில் பதற்றத்தை குறைக்கும் வகையில் இரு மாநிலங்கள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இரு மாநில தலைமை செயலர்களும் கையெழுத்திட்ட இந்த ஒப்பந்தத்தில், எல்லையிலிருந்து போலீசாரை விலக்கிக் கொள்ள இரு மாநில அரசுகளும் சம்மதித்துள்ளன. 

இதற்கிடையே, அசாம் - மிசோரம் இடையே நடந்த எல்லை மோதல் தொடர்பாக, அசாம் முதல்-மந்திரி மற்றும் ஆறு அதிகாரிகள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் மிசோரம் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். இது குறித்து அசாம் முதல்-மந்திரி சர்மா கூறுகையில், எல்லை மோதல் தொடர்பான விசாரணைக்கு நான் தயார். ஆனால் இந்த விசாரணையை, சி.பி.ஐ., போன்ற பொது அமைப்பு மேற்கொள்ள வேண்டும் என்றார்.

இந்நிலையில் அசாம் - மிசோரம் எல்லை பிரச்சினை தொடர்பான அமைதி தீர்வுக்கு மத்திய அரசு முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், “அசாம் - மிசோரம் எல்லையில் சமீபத்தில் நடந்த மோதல் பற்றி சி.பி.ஐ., உட்பட எந்த அமைப்பின் விசாரணைக்கும் உத்தரவிட மத்திய அரசு விரும்பவில்லை. எல்லைப் பிரச்சினைக்கு அமைதி தீர்வு காணவே விரும்புகிறது. இரு மாநில முதல்-மந்திரிகளையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா எல்லைப் பிரச்சினைக்கு அமைதி தீர்வு காண்பது பற்றி பேசினார். அடுத்த சில நாட்களில் நல்ல தீர்வு ஏற்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story