வானில் சீறிப்பாய்ந்த ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-10’ ராக்கெட்


வானில் சீறிப்பாய்ந்த ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-10’ ராக்கெட்
x
தினத்தந்தி 12 Aug 2021 12:21 AM GMT (Updated: 12 Aug 2021 12:35 AM GMT)

வானில் இருந்து கண்ணாக செயல்படும் செயற்கைகோளுடன் ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-10’ ராக்கெட் இன்று வானில் சீறிப்பாய்ந்தது

சென்னை, 

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பூமி கண்காணிப்புக்காக 2 ஆயிரத்து 268 கிலோ எடை கொண்ட ஈ.ஓ.எஸ்.03 என்ற செயற்கைகோளை வடிவமைத்து உள்ளது. இதனை ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-10’ ராக்கெட்டில் பொருத்தி, இன்று (வியாழக்கிழமை) காலை ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணுக்கு ஏவப்பட்டது.  

ராக்கெட்டுக்கு உந்து சக்தியாக உள்ள எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்தது. தொடர்ந்து ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான 14 மணி நேர ‘கவுண்ட்டவுன்’ நேற்று பிற்பகல் 3.43 மணிக்கு தொடங்கியது. முன்னதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் ராக்கெட் மற்றும் செயற்கைகோள்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர். தொடர்ந்து ‘கவுண்ட்டவுனை’ முடித்து கொண்டு காலை 5.43 மணிக்கு ராக்கெட் விண்ணை நோக்கி தீ பிழம்பை கக்கியவாறு சீறிபாய்ந்தது. 

இந்த ராக்கெட்டில் முதன்முறையாக வெப்பத்தில் இருந்து அதிக எடை கொண்ட செயற்கைகோள் மற்றும் அதில் உள்ள மின்னணு பொருட்களை பாதுகாப்பதற்காக ராக்கெட்டின் கூம்பு வடிவிலான முகப்பு பகுதியில் தனியாக வெப்பத்தகடுகள் பொருத்தப்பட்டு உள்ளன. இதனால் திட்டமிட்ட இலக்கில் செயற்கைகோளை நிலை நிறுத்தும் வரை செயற்கைகோள்களை இந்த வெப்பத்தகடுகள் பாதுகாத்து கொள்கிறது. கொரோனா பரவல் காரணமாக பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. 

Next Story